அதிமுக வேட்பாளர் தென்னரசுவை சுத்து போட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.. ஈரோடு கிழக்கில் பரபரப்பு..!!
AIADMK candidate thennarasu surrounded by OPS supporter
ஈரோடு கிழக்கில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசுவை ஓபிஎஸ் ஆதாரவாளர்கள் சூழ்ந்ததால் பரபரப்பு..!!
ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவ்வாறு பிரச்சாரம் மேற்கொண்டு இருந்த பொழுது அதிமுக தலைவர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்களின் பெயர்களை சொல்லி அவர்களின் ஆதரவு பெற்ற வேட்பாளர் கே.எஸ் தென்னரசுக்கு வாக்களிக்குமாறு ஒலிபெருக்கியில் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் திடீரென்று பிரச்சார வாகனத்தை வழிமறித்த சில அதிமுகவினர் வேட்பாளர் தென்னரசுவை கீழே இறங்கும்படி கேட்டுக் கொண்டனர். அவர்கள் அதிமுக கரைவேட்டி மற்றும் கையில் அதிமுக கொடியுடன் இருந்ததால் இபிஎஸ் ஆதரவாளர்கள் என நினைத்து கீழே இறங்கிய தென்னரசுவை சூழ்ந்து கொண்டனர்.
அப்பொழுது தாங்கள் ஓபிஎஸ் ஆதார்வாளர்கள் என்று அறிமுகம் செய்து கொண்டு பேசியதால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கே.எஸ் தென்னரசு அருகே சென்ற அவர்கள் நாங்களும் உங்களுக்கு தான் வாக்களிக்கப் போகிறோம்.
எங்களின் ஆதரவும் உங்களுக்கு தான், ஒலிபெருக்கியில் அதிமுக தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களின் பெயர்களை சொல்லும் பொழுது ஓபிஎஸ் அய்யாவின் பெயரையும் சேர்த்து குறிப்பிட்டால் இன்னும் நமக்கு வாக்குகள் அதிகமாக கிடைக்கும். நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். இந்த தொகுதியிலும் ஓபிஎஸ்க்கு ஆதரவு உள்ளது.
எனவே ஓ.பன்னீர்செல்வம் பெயரையும் குறிப்பிட்டு பிரச்சாரம் செய்யுங்கள் என கூறியுள்ளனர். இதற்கு அதிமுக வேட்பாளர் தென்னரசு சரி எனக் கூறியபடி அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றார். எதிர்பாராத நேரத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக வேட்பாளரை சூழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
AIADMK candidate thennarasu surrounded by OPS supporter