காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு சாதகமாக செயல்படும் மாவட்ட நிர்வாகம்.. கொந்தளிக்கும் அதிமுக.!!
AIADMK alleged district admin favor to Congress MLA
கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் பழனி நாடாரும், அதிமுக சார்பில் செல்வமோகன்தாஸ் பாண்டியனும் போட்டியிட்டனர். இதில் செல்வமோகன்தாஸ் பாண்டியனை விட 370 வாக்குகள் அதிகமாக பெற்று பழனி நாடார் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் தபால் வாக்குகளின் எண்ணிக்கையில் குளறுபடிகள் நடந்ததாகவும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் செல்வமோகன்தாஸ் பாண்டியன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தபால் வாக்குகளை மட்டும் மீண்டும் எண்ண வேண்டும் என்று உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் இன்று காலை 10 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
அப்போது தென்காசி தொகுதியில் பதிவான 13சி வாக்கு பெட்டியில் உள்ள தபால் வாக்குகளை மட்டுமே எண்ணுவதாகவும் அனைத்து பெட்டிகளிலும் உள்ள தபால் வாக்குகளை எண்ண வேண்டும் என்று அதிமுக வேட்பாளர் கோரிக்கை வைத்தார். இதனால் வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்குள் செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து அதிமுக மதுரை மண்டல ஐடி விங் செயலாளர் ராஜ்சத்யன் தனது ட்விட்டர் பக்கத்தில் நீதிமன்ற உத்தரவையும் முறையாக செயல்படுத்த மறுக்கும் தென்காசி மாவட்ட நிர்வாகத்திற்கு கடும் கண்டனம். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அரங்குக்குள் ஊடகங்களை அனுமதிக்க மறுப்பது ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட சவால்.
வாக்குச்சீட்டின் மேலுள்ள கவரை எடுத்துவிட்டு வாக்குச்சீட்டை மட்டும் எண்ணிக்கைக்கு உட்படுத்துவதாக புகார் வருகிறது... இதன்மூலம் செல்லாத ஓட்டுகளை நிராகரிக்கும் வாய்ப்பை வழங்கவிடாமல் தடுத்து காங்கிரஸ் வேட்பாளருக்கு சாதகமாக மாவட்ட நிர்வாகம் செயல்பட முயல்வது கண்டனத்திற்குரியது. உண்மையில் நாம் வாக்களித்து தேர்ந்தெடுத்தவர்தான் நமக்கு சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறாரா என்ற பெரும் குழப்பத்தில் தென்காசி தொகுதி மக்கள் இருக்கும்போது வெளிப்படை தன்மையுடன் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தி நீதியை நிலைநாட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்..!" என வலியுறுத்தியுள்ளார்.
English Summary
AIADMK alleged district admin favor to Congress MLA