காலையிலேயே அதிர்ச்சி - ஷவர்மா சாப்பிட்டு இளைஞர் உயிரிழப்பு.!
youth died after eat shawarma in kerala
கேரளா மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் ராகுல் டி.நாயர். இவர் கொச்சி அருகே காக்கநாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், ராகுல் கடந்த 18-ம் தேதி காக்கநாட்டிலுள்ள ஒரு ஓட்டலிலிருந்து ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து, ஷவர்மா மற்றும் மயோனைஸ் உள்ளிட்டவற்றை வாங்கிச் சாப்பிட்டுள்ளார். அதன் பின்னர் ராகுலுக்கு சற்று உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் கடந்த சனிக்கிழமை காக்கநாட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் ராகுல் டி.நாயர் நேற்று மாலை உயிரிழந்தார்.
ராகுல் டி.நாயரின் உடல், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காக்கநாடு லே ஹையாத் என்ற ஓட்டலிலிருந்து வாங்கிய ஷவர்மாவைச் சாப்பிட்ட பிறகுதான் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக ராகுல் டி.நாயரின் உறவினர்கள் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
அந்தப் புகாரின் பேரில் போலீசார் அந்த ஓட்டலுக்குச் விரைந்துச் சென்று விசாரணை நடத்தி ஓட்டலை மூடி சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். ஷவர்மா சாப்பிட்ட பின்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, இளைஞர் ஒருவர் மரணமடைந்த சம்பவம், கேரளாவில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
youth died after eat shawarma in kerala