பிரியாணி சாப்பிடச் சென்ற இளைஞர்கள்.! வேன் - கார் நேருக்கு நேர் மோதி விபத்து.!
three peoples died for car van accident in chennai arakonam
பிரியாணி சாப்பிடச் சென்ற இளைஞர்கள்.! வேன் - கார் நேருக்கு நேர் மோதி விபத்து.!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் சோளிங்கர் ரோடு பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு. இவர் அரக்கோணத்தை சேர்ந்த தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் அரக்கோணத்தில் இருந்து சென்னை புளியந்தோப்புக்கு ஒரு காரில் புறப்பட்டு சென்றுள்ளார்.
அவர்கள் திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள இருளஞ்சேரி சாலையில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரில் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற வேன் மீது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரும், வேனும் நொறுங்கி சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தை கண்ட அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் உடனடியாக போலீசாருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்தவர்களில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இரண்டு பேர் மட்டும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதன் பின்னர் போலீசார் விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோல், தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வேனில் இருந்த 14 பேருக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்ட நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அதில், அவர்கள் அரக்கோணத்தில் இருந்து சென்னை புளியந்தோப்பில் உள்ள பிரியாணி கடைக்கு பிரியாணி சாப்பிடுவதற்காக காரில் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்தது. பிரியாணி சாப்பிடச் சென்ற வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் பேரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
three peoples died for car van accident in chennai arakonam