கூட்டாட்சியே அரசியல் சாசனம்.. மத்திய அரசு "மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கக் கூடாது"... உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!! - Seithipunal
Seithipunal


டெல்லி அரசின் கீழ் பணியாற்றும் அதிகாரிகளை நியமனம் செய்வது மற்றும் பணியிட மாற்றம் செய்வது குறித்தான அதிகார மோதல் டெல்லி துணைநிலை ஆளுநருக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கெஜ்ரிவால் அரசுக்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வந்தது. இதனை எதிர்த்து டெல்லி அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 

ஆளுநர் விவகாரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே உச்சபட்ச அதிகாரம் உள்ளது என்பதை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே சில வழக்குகளில் தீர்ப்பு வழங்கி இருந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு டெல்லி அரசு தொடுத்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.

கடந்த ஒரு வாரமாக வாதம் மற்றும் பிரதிவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழங்கப்பட்ட தீர்ப்பில் அரசியல் சாசனத்தில் அமர்ந்த 5 நீதிபதிகளும் ஒரே தீர்ப்பை வழங்கியுள்ளனர். அதன்படி "இந்த வழக்கானது இந்தியாவின் கூட்டாட்சிக்கு முன்மாதிரியாக உள்ளது. டெல்லி மக்களின் பிரதிநிதித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் டெல்லி சட்டப்பேரவையில் அம்மாநில மக்களுக்கு தேவையான சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் உள்ளது.

ஜனநாயகம், கூட்டாட்சி என்பது நமது அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கட்டமைப்பாக இருந்து வருகிறது. அதே போன்று மாநில அரசுகளின் நிர்வாக அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக் கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.  மத்திய அரசு மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் இருக்கக் கூடாது.

ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தின் அதிகார வரம்புக்குள் அதிகாரிகள் இல்லையென்றால் அரசாங்கத்தின் மீதான நம்பகத்தன்மை என்பது கேள்விக்குறியாகி விடும். ஒரு அமைச்சரின் கீழ் செயல்படும் அதிகாரி அமைச்சரின் சொல்லுக்கு கட்டப்பட்டு செயல்படவில்லை என்றால் ஒட்டுமொத்த உட்கட்டமைப்பும் சரிந்து போகும். எனவே அதிகாரிகளை நியமனம் செய்வதற்கு டெல்லி அரசுக்கு உரிமை உள்ளது.

டெல்லி அரசு யூனியன் பிரதேசமாக இருந்தாலும் கூட்டாட்சியின் படியே இயங்குகிறது" என உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. டெல்லி அரசால் தொடரப்பட்ட இந்த வழக்கின் மூலம் அனைத்து மாநிலங்களின் கூட்டாட்சி தத்துவ முறைப்படி மாநில அரசுகளின் உரிமைகள் மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை மத்திய அரசால் ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது என்பதை உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme Court verdict state govt has full power


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->