மதுபோதையில் சட்டப்பேரவைக்கு வந்த பஞ்சாப் முதல்வர்..? பரிசோதனை நடத்த வேண்டும்; எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்..!
Punjab Chief Minister Enters Assembly Under the Influence of Alcohol
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சட்டப்பேரவைக்கு மது அருந்திவிட்டு வந்ததாக காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவை நடவடிக்கைகளின் போது பகவந்த் மான், போதையில் இருந்ததாகவும், அவருக்கு மது போதை பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் மற்றும் அகாலி தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சுக்பால் சிங் கைரா தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது;
"இன்று சட்டப்பேரவையில் முதல்வர் பகவந்த் மான் போதையில் இருந்தார். அவருக்கு மது போதை பரிசோதனை நடத்தப்பட வேண்டும். நாங்கள் (காங்கிரஸ்) அவையிலிருந்து வெளிநடப்பு செய்துவிட்டோம். மேலும், நாங்களே முன்வந்து அப்பரிசோதனையை மேற்கொள்ளவும் தயாராக இருக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேப்போன்று, சிரோமணி அகாலி தளம் கட்சி தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது;
"முதலமைச்சரின் நடத்தையைச் சிரோமணி அகாலி தளம் வன்மையாகக் கண்டிக்கிறது; இந்நாளில் அவர் மது அருந்திய நிலையில் வந்திருக்கக் கூடாது. அவரை இன்றே ஒட்டுமொத்த பஞ்சாப் மக்களின் முன்னிலையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, ராஜ்யசபா உறுப்பினர் சுவாதி மாலிவால் தனது எக்ஸ் தளத்தில் இது குறித்து தெரிவித்துள்ளதாவது;
"ஜனநாயகத்தின் ஆலயமாகத் திகழும் பஞ்சாப் சட்டப்பேரவைக்கு, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இன்று மீண்டும் மது போதையில் வந்துள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். தற்போது இந்த விவகாரம் பஞ்சாப் அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாகியுள்ளது.
English Summary
Punjab Chief Minister Enters Assembly Under the Influence of Alcohol