விஞ்ஞானிகளுக்கு புதிய விருது..மத்திய உள்துறை செயலாளர் தகவல்..!
new award for scientist
சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஒட்டுமொத்த விருதுகளையும் மாற்றி அமைக்குமாறு வலியுறுத்தினார். விருதுக்குரியோரை தேர்வு செய்யும் பணியில் வெளிப்படைத்தன்மையை உருவாக்குவதன் மூலம், அந்த விருது மீது நம்பகத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்து, மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா எட்டு விதமான அறிவியல் மற்றும் சுகாதாரத்துறைகளின் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில் அவர் பேசியதாவது,
"தற்போது வழங்கப்பட்டு வரும் 300-க்கு மேற்பட்ட விருதுகளை குறைத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக, தனி நன்கொடை விருதுகள், பெல்லோஷிப் மற்றும் உள்விருதுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இதையடுத்து, சுகாதாரத்துறை சார்பில் ஆண்டுதோறும் 51 நர்சுகளுக்கு வழங்கப்படும், "பிளாரன்ஸ் நைட்டிங்கேல்" விருதின் எண்ணிக்கையை குறைத்துக்கொள்ள வேண்டும் மற்றும் தேசிய மருத்துவ கவுன்சில் வழங்கி வரும் மூன்று விருதுகளை மறுசீரமைக்க வேண்டும்.
மேலும், அதிக மதிப்பு கொண்ட புதிய விருது ஒன்றை உருவாக்க வேண்டும். அதுபோல், தகுதிவாய்ந்த விஞ்ஞானிகளுக்கு 'நோபல்' பரிசு போன்று 'விஞ்ஞான் ரத்னா' என்ற புதிய விருதை உருவாக்கி வழங்க வேண்டும்.
இந்த விருது குறித்து, மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகருடன் ஆலோசனை நடத்த வேண்டும். அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் வழங்கும் "சாந்தி ஸ்வருப் பட்நாகர்" விருதுகளை தொடர்ந்து வழங்க வேண்டும்.
மேலும், தற்போதைய விருதுகளை ரத்து செய்துவிட்டு, அதிக அந்தஸ்து கொண்ட புதிய விருதுகளை உருவாக்குமாறு புவியியல் அமைச்சகம், விண்வெளி துறை, அணுசக்தி துறை போன்றவற்றிற்கு ஆலோசனை வழங்கினார்.