" ஹைத்ராபாத்தின் வள்ளலார் " மருத்துவ தம்பதியின் மகத்தான செயல்.. ஏழைகளின் பசியை தொய்வின்றி போக்கும் நெகிழ்ச்சி..!
Hyderabad Andari illu Doctor Couple Serve Free House to Make and Eat Food
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரை சேர்ந்த தம்பதிகள் மருத்துவர் சூரிய பிரகாசம் - மருத்துவர் காமேஸ்வரி. ஹைதராபாத் நகரில் உள்ள கொத்தப்பேட்டை பகுதியில் ஏழைகளுக்கு உணவு வழங்கும் வகையில், கடந்த 2006 ஆம் வருடம் இவர்கள் ஒரு வீட்டை கட்டியுள்ளனர்.
காலை 5 மணி முதல் இரவு ஒரு மணிவரை அங்கு யார் வேண்டுமென்றாலும் சென்று தங்கி சமைத்து சாப்பிட்டு செல்லலாம். அதற்கேற்ற வகையில் வீட்டிற்குள்ளேயே அரிசி, பருப்பு, காய்கறி, சமையல் எரிவாயு, தண்ணீர் என்று சமையல் பொருட்கள் அனைத்துமே அங்கே வைத்துள்ளனர்.
தெலுங்கு மொழியில், " அந்தாரி இல்லு " என்ற பெயர் கொண்ட இந்த வீட்டில், வள்ளலாரின் அணையா அடுப்பு போல தொடர்ந்து சமையல் வேலை நடந்துகொண்டே இருக்கும். இந்த பகுதியை சுற்றிலும் குடியிருப்பு பகுதி இருப்பதால், இரவு ஒரு மணியிலிருந்து காலை 5 மணி வரை மட்டும் வீடு பூட்டப்பட்டு இருக்கும்.
தங்கும் விடுதிகளில் பணம் கட்ட முடியாத மாணவர்கள், வேலையை தேடி ஹைதராபாத் வரும் நபர்கள் என்று யாராக இருந்தாலும், ஒரு வேளையாவது இந்த வீட்டுக்கு சென்று உணவு சாப்பிட்டு இருப்பார்கள். இந்த வீட்டிலேயே நூலகமும் இயங்கி வருவதால், மாணவர்கள் தங்கள் அறிவையும் வளர்த்து வருகின்றனர்.
இது தொடர்பாக மருத்துவர் சூரிய பிரகாசம் கூறுகையில், " எங்களது இல்லத்தில் எப்போதும் சமையல் எரிவாயு எரிந்து கொண்டிருக்கும். சமையல் தெரியாதவர்கள் கூட இங்கு வந்து, பிறருடன் சேர்ந்து கற்றுக் கொள்கின்றனர். இங்கு வைத்து சமையல் கற்றுக்கொண்டவர், இன்று கேட்டரிங் சர்வீஸ் நடத்துகிறார்.
சமையல் பொருட்கள் வாங்க எங்களின் வருமானத்தை உபயோகம் செய்கிறோம். இங்கு வந்த பலரும் இணையம் வாயிலாக இதனை பிரபலப்படுத்திவிட்டார்கள். பலரும் பணம் கொடுக்க முன்வந்தனர். ஆனால், அவர்களிடம் இருந்து சமையல் பொருட்களை மட்டுமே நாங்கள் பெற்று வருகிறோம். தினமும் 40 முதல் 50 பேர் வருகிறார்கள். வீட்டில் உள்ள மணியை யாரவது அடித்தால், நாங்கள் இருவரும் அங்கு சென்று, மணி அடுத்தவரின் பிரச்சனையை கேட்டறிந்து, ஆலோசனை கூறுவோம் " என்று தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Hyderabad Andari illu Doctor Couple Serve Free House to Make and Eat Food