அதிகாலையில் சோகம் : நேருக்கு நேர் மோதிய சுற்றுலா பேருந்து - லாரி - பயணிகளின் நிலை என்ன?
eight peoples died and eighteen peoples injured for accident in andira
சென்னையில் உள்ள வடபழனியில் இருந்து தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நோக்கி சுற்றுலாப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்தப் பேருந்து நெல்லூர் அருகே உள்ள காவலி பகுதியில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் எட்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் சிக்கி 18 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதைப்பார்த்த அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்தில் உயிரிழந்தவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து போலீசார் இந்த விபத்துத் தொடர்பாக விசாரணை நடத்தியதில், லாரி ஓட்டுநர் மற்றொரு லாரி மீது மோதாமல் இருப்பதற்காக விலகிச் செல்ல முயன்றபோது எதிரே வந்த சுற்றுலாப் பேருந்து மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
eight peoples died and eighteen peoples injured for accident in andira