பீகாரில் மத்திய அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் கவிழ்ந்து விபத்து - 5 போலீசார் காயம்
5 injured as Union minister security vehicle accident in Bihar
பீகாரில் மத்திய அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் கவிழ்ந்து விபத்தில் 5 போலீசார் காயமடைந்துள்ளனர்.
பீகார் தலைநகர் பாட்னாவில் நேற்றிரவு மத்திய இணை அமைச்சர் அஷ்வினி சவுபே பக்ஸரில் இருந்து பாட்னாவுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அமைச்சரின் பாதுகாப்பிற்கு சென்று கொண்டிருந்த அணிவகுப்பு வாகனங்களில் ஒன்று மதிலா நாராயணப்பூர் அருகே கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இதையடுத்து மற்ற அணிவகுப்பு வாகனங்களில் வந்த பாதுகாவலர்கள், விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் 5 போலீசார் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு அருகில் உள்ள தம்ராவ் சதார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்தில் அமைச்சருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.
இதைத்தொடர்ந்து இந்த விபத்து தொடர்பாக அமைச்சர் அஷ்வினி சவுபே வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நாங்கள் பக்சார் நகரிலிருந்து பாட்னா சென்று கொண்டிருந்தோம். எங்களின் பாதுகாப்பிற்காக கொர்னசாராய் காவல் நிலையத்திலிருந்து வந்த அணிவகுப்பு வாகனம் ஒன்று கால்வாய்க்குள் கவிழ்ந்தது. மேலும் அனைவரும் பாதுகாப்புடன் உள்ளனர் என்றும், பகவான் ஸ்ரீராமருக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
English Summary
5 injured as Union minister security vehicle accident in Bihar