ஆந்திரா : அடுக்குமாடி குடியிருப்பு பால்கனி இடிந்து விழுந்து விபத்து - 2 பெண்கள் பலி
2 women killed in apartment balcony collapse in Andhra
ஆந்திர மாநிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பால்கனி இடிந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திர பிரதேச மாநிலம் பாபட்லா மாவட்டத்தின் பார்சுரு பகுதியில் உள்ள ஐந்து அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் 20 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த அடுக்குமாடி குடியிருப்பு 10 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டதால், சேதம் அடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் நேற்று மாலை இரண்டாவது மாடியில் குடியிருந்த மதுமோகன் என்பவரின் மனைவி ஸ்ரீவித்யா (36), முதல் மாடியில் குடியிருந்த அனுராதா(56) என்பவரது வீட்டு பால்கனியில் அனுராதாவுடன், ஸ்ரீவித்யா உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது திடீரென பால்கனி இடிந்து விழுந்ததில் இருவரும் கீழே விழுந்தனர். இதில் ஸ்ரீவித்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் அனுராதா பலத்த காயம் அடைந்த நிலையில் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குண்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் அனுராதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதையத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
2 women killed in apartment balcony collapse in Andhra