தேசிய அளவிலான விளையாட்டு போட்டி; கலந்து கொண்டிருந்தால் உயர்கல்விக்கு உதவி இருக்கும், பள்ளி மாணவி வருத்தம்!
National Games for School students
பள்ளி மாணவர்களுக்காக டெல்லியில் நடைபெறும், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களில் ஒருவர் கூட இடம் பெறவில்லை என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.
மொத்தம் 247 மாணவர்கள் , இவர்கள் யாருமே இடம்பெறாத அவல நிலைக்கு யார் காரணம் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தேசிய பள்ளி விளையாட்டுக் குழுமம் சார்பில் , ஜூன் 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை , பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கான அறிவிப்பு சென்ற மாதம் அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டது. இந்த போட்டிகள் கொரோனாவால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் நடைபெறாமல் இருந்ததால் மாணவர்கள் அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
தேசிய அளவில் நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படுகின்றன. தமிழக அரசு சார்பில் தங்கம் வெல்வோருக்கு 2 லட்சம் ரூபாய், வெள்ளி வெல்வோருக்கு 1.50 லட்ச ரூபாய், வெண்கலம் வெல்வோருக்கு 50 ஆயிரமும் ஊக்கத்தொகையாக அறிவிக்கப்பட்டது.
பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தாலும், சரிவர தகவல் பரிமாற்றம் செய்யப்படாததாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மாணவர் கூட இப்போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து 127 மாணவர்கள், 120 மாணவியர்கள், என மொத்தம் 247 பேர், இந்த போட்டியில் கலந்து கொள்ள ஆர்வமாக இருந்தனர், என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மாணவர் ஒருவர் பேசுகையில்; தேசிய அளவில் நடைபெறவிருந்த விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள ஆர்வமாகவும் தயாராகவும் இருந்தேன். ஆனால் சரியான தகவல் பரிமாற்றம் இல்லாததால் கலந்து கொள்ள முடியவில்லை எனக் கூறினார்.
மற்ற மாநில மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடுவதை பார்க்கும் போது வருத்தமாக உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்றிருந்தால் மேல் படிப்புக்கு உதவியாய் இருந்திருக்கும். இறுதியாக நடந்த தேசிய போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளேன், எனக் கூறினார் .
English Summary
National Games for School students