திருப்பத்தூரில் உறைந்த மனிதநேயம்… ஜவ்வாது மலை பகுதியில் தாயை கணவருடன் சேர்ந்து கொன்ற மகள்...!
Humanity frozen Tirupattur daughter kills her mother help her husband Jawadhu Hills area
திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாது மலை அடிவாரத்தில் உள்ள புதூர்நாடு அருகேயுள்ள நடுகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாம்பசிவம். அவரது மனைவி சின்னகாளி (40) கூலித்தொழிலாளியாக வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு காளீஸ்வரி, கீதா (22) என இரண்டு மகள்கள். இருவருக்கும் திருமணம் முடிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் சாம்பசிவம் மரணமடைந்ததால் சின்னகாளி தனியாகவே வசித்து வந்தார்.

இந்த சூழலில், கடந்த 11-ஆம் தேதி சின்னகாளி, தனது வீட்டிற்கு அருகிலுள்ள விவசாய நிலத்தில் தலையில் படுகாயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் கிடைத்ததும் திருப்பத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இதை மர்ம சாவாக பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
இந்த விசாரணையின் போது, சின்னகாளியின் இரண்டாவது மகள் கீதா முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தீவிரமாக விசாரித்ததில், கீதா தனது கணவர் சிதம்பரம் (32) உடன் சேர்ந்து தாயை கொலை செய்ததாக உண்மையை ஒப்புக்கொண்டார்.
போலீசார் தெரிவித்ததாவது,"நடுகுப்பம் பகுதியில் சின்னகாளியின் பெயரில் சுமார் 6 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்திற்கு பட்டா பெறுவதற்காக சின்னகாளி முயற்சி செய்து வந்துள்ளார். இதற்கிடையில், கீதா அந்த நிலத்தை தனது பெயருக்கு மாற்றி எழுதிக் கொடுக்குமாறு தாயிடம் வற்புறுத்தியுள்ளார். ஆனால் சின்னகாளி அதற்கு மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கீதா, கடந்த 10-ஆம் தேதி இரவு தாயை அழைத்துக்கொண்டு விவசாய நிலத்துக்கு சென்றுள்ளார். அங்கு முன்கூட்டியே மறைந்திருந்த கணவர் சிதம்பரத்துடன் சேர்ந்து, பட்டாவை தங்கள் பெயருக்கு மாற்றிக் கொடுக்குமாறு மீண்டும் வற்புறுத்தியுள்ளனர்.
சின்னகாளி மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் உச்சகட்ட ஆத்திரத்தில், இருவரும் சேர்ந்து கல்லால் தாக்கியும், கழுத்தை நெரித்தும் சின்னகாளியை கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.இந்த கொடூர சம்பவம் தொடர்பாக கீதா மற்றும் சிதம்பரம் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களுக்கு இரண்டு சிறுவர்கள் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். நிலத்தாசை காரணமாக மகளே தாயை கணவருடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம், ஜவ்வாது மலை பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Humanity frozen Tirupattur daughter kills her mother help her husband Jawadhu Hills area