மன்னிப்பு கேளுங்க ஏ.ஆர் ரகுமான்! ₹15 கோடி நஷ்டஈடு கேட்டு பறந்த நோட்டீஸ்!
Surgeon association sent notice to arrahman demanding rs15crores
சென்னை அரும்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஒருங்கிணைப்பு அமைப்பின் சார்பில் அதன் தேசிய மாநாட்டின் செயலாளர் மருத்துவர் விநாயக் செந்தில் சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரில் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 26 மற்றும் 30ம் தேதிகளில் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான மாநாடு நடத்த திட்டமிட்டிருந்தோம். அதில் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து அவருக்கு முன்பணமாக ரூ. 29.50 லட்சம் கொடுக்கப்பட்டது.
ஆனால், தமிழக அரசின் அனுமதி பெறாததால் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக கொடுத்த முன்பணத்தை திருப்பி தராமல் ஏ.ஆர். ரஹ்மான் தரப்பு ஏமாற்றி வருகிறது" என அந்த புகாரில் குற்றம் சாட்டப்பட்டது. இதனை அடுத்து அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட மோசடி புகார் தொடர்பாக மத்திய குற்றவியல் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதற்கு அறுவை சிகிச்சை புணர்கள் சங்கம் அளித்த புகாருக்கும் ஏ.ஆர். ரஹ்மானிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நிகழ்ச்சியை ரத்து செய்தால் முன்பணம் திருப்பி தரமுடியாது என்ற அடிப்படையில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் ஏ.ஆர். ரஹ்மான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்திற்கு எதிராக ஏ.ஆர். ரஹ்மான் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. அதில் ஏ.ஆர்.ரஹ்மான் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தோடு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக புகார்தாரருக்கு எதிராக ஏ.ஆர். ரஹ்மான் சார்பாக அவருடைய வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதில், 15 நாட்களுக்குள் ரூ.10 கோடி மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும், பொது மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் நிபந்தனை வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் தரப்பு நோட்டீஸ்க்கு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் சார்பில் பதில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஏ.ஆர். ரஹ்மான் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், ரூ.15 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், இசை நிகழ்ச்சிக்கு முன்பணமாக பெற்ற ரூ.29.50 லட்சத்தை வட்டியுடன் கொடுக்க வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
English Summary
Surgeon association sent notice to arrahman demanding rs15crores