நடிகர் யோகி பாபு மீது போலீசில் புகார்.. காரணம் என்ன.?
Case filed against actor yogibabu
நகைச்சுவை நடிகர் யோகி பாபு மீது திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வருபவர் யோகி பாபு. தற்போது இவர் காண்ட்ராக்டர் நேசமணி, மெடிக்கல் மிராக்கிள், ஜவான் உள்ளிட்ட திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இன்னும் ஒரு சில பெயரிடப்படாத திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் வளசரவாக்கம் பழனியப்பா நகரை சேர்ந்த ஹாஷீர் என்பவர் விருகம்பாக்கம் சின்மயா நகரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் யோகி பாபு மீது புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், நான் தயாரிக்கும் ஜாக் டேனியல் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்காக காமெடி நடிகர் யோகிபாபுவுடன் பேசி படத்தில் நடிக்க சம்பளமாக 65 லட்சம் ரூபாய் பேசி, முன்பணமாக 20 லட்சம் ரூபாய் யோகி பாபு பெற்றுக் கொண்டார்.
ஆனால் அதன் பின்னர் படப்பிடிப்பை தொடங்கியதும் யோகி பாபுவை அழைத்த போது அவர் வரவில்லை. மேலும் படப்பிடிப்புக்கு வராமலும், பணத்தை திருப்பி கொடுக்காமலும் இழுத்தடித்து வருகிறார். எனவே அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் யோகி பாபுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Case filed against actor yogibabu