அதிமுகவின் உறுப்பினராக சேர 2.44 கோடி பேர் விண்ணப்பம் - அதிகாரபூர்வமாக அறிவித்த இபிஎஸ்!
AIADMK Edappadi Palanisamy Announce Aug 5
அஇஅதிமுகவில் சேர 2.44 கோடி பேர் விண்ணப்பித்துள்ளதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அதிமுகவின் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பித்துக் கொள்வதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்குமான விண்ணப்பப் படிவங்கள் தலைமைக் கழகத்தில், 5.4.2023 முதல் விநியோகிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் 4.5.2023 முதல் பெறப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்த்திட வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து செயல்பட்டு வந்த நிலையில், தற்போது வரையில் 2 கோடியே 44 ஆயிரத்து 400 பேர் உறுப்பினர்களாக சேர்வதற்கு விண்ணப்பித்துள்ளனர் என்று, எடப்பாடி பழனிச்சாமி இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த அறிக்கையில், "கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு’’ வருகின்ற 20.8.2023 அன்று மதுரையில் நடைபெற உள்ள நிலையில், இந்த மாநாட்டில், கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என்பதற்காக, மாவட்டக் கழகங்களின் சார்பில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றதால், கழகத்தில் உறுப்பினர்களாக சேருவதற்கும், உறுப்பினர் பதிவை புதுப்பிப்பதற்குமான காலக் கெடுவை நீட்டித்துத் தருமாறு, 4.8.2023 அன்று தலைமைக் கழகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது, மாநாட்டுக் குழு உறுப்பினர்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, 17.8.2023 மாலை 5 மணிவரை நீட்டிக்கப்படுகிறது. இதுவே இறுதியான வாய்ப்பாகும்.
புதிய உறுப்பினர் உரிமைச் சீட்டுகளைப் பெற்றுள்ள கழக உடன்பிறப்புகள் மட்டுமே, கழகப் பொறுப்புகளில் நியமனம் செய்யப்பட்டு பணியாற்றுவதற்கும், கழக அமைப்புத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கும், வாக்களிப்பதற்கும் தகுதி உடையவர்கள் ஆவார்கள்" என்று அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
English Summary
AIADMK Edappadi Palanisamy Announce Aug 5