பணத்துடன் கடத்தப்பட்ட ஏ.டி.எம் வாகனம் - சிசிடிவியால் சிக்கிய 6 பேர் கைது.!
six peoples arrested for kidnape atm vehicles
குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் மாவட்டம் காந்திதாம் நகரில் பண மேலாண்மை நிறுவனத்தைச் சேர்ந்த ஐந்து ஊழியர்கள், அப்பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் பணத்தை நிரப்புவதற்காக ரூ.2.13 கோடி பணத்துடன் வாகனத்தில் சென்றுள்ளனர்.
அப்போது, அவர்கள் வழியில் டீ குடிப்பதற்காக வண்டியை சாலையோரத்தில் நிறுத்திவிட்டுச் சென்றுள்ளனர். அந்த இடைப்பட்ட நேரத்தில், மர்ம நபர் ஒருவர் போலி சாவியை பயன்படுத்தி, அந்த ஏ.டி.எம். வாகனத்தை கடத்திச் சென்றுள்ளார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்களில் ஒருவர், அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரிடம் லிப்ட் கேட்டு கடத்தப்பட்ட வாகனத்தை துரத்திச் சென்றுள்ளார்.
இந்த நிலையில், ஏ.டி.எம். வாகனத்தை கடத்திச் சென்ற நபர், ஒரு காரின் மீது மோதிவிட்டுச் சென்றுள்ளார். இதனால் அந்தக் காரின் ஓட்டுனரும் அந்த வாகனத்தை துரத்திச் சென்றார். இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசாரும் அங்கு விரைந்து வந்தனர்.
இதை பார்த்த கடத்தல்காரர், வாகனத்தை ஊருக்கு வெளியே நிறுத்திவிட்டு, வேறு ஒரு காரில் தப்பித்துச் சென்றுள்ளார். அதன் பின்னர் போலீசார் கடத்தப்பட்ட வாகனத்தையும், அதில் இருந்த ரூ.2.13 கோடி பணத்தையும் மீட்டனர்.
இதைத் தொடர்ந்து போலீசார் சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில், இந்த கடத்தலில் தொடர்புடைய 6 நபர்களை கைது செய்தனர். அவர்களில் 2 பேர் ஏற்கனவே பண மேலாண்மை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தது தெரிய வந்துள்ளது. இவர்கள் 6 பேர் மீது தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
six peoples arrested for kidnape atm vehicles