காங்கிரஸ் செய்த ஊழல்களை அடுக்கிவைத்த பிரதமர் மோடி!!
modi talk about congress
இந்தியாவில் பொதுத்தேர்தல் வரவுள்ள நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் கடந்த மாதம் 31-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை ஆற்றினார்.
இதனையடுத்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர், அரசாங்கம் என்றால் அது இந்திய மக்களுக்காக உழைக்க வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நடக்க வேண்டும். ஊழலுக்கு இடம் தரக்கூடாது. எங்கள் அரசு ஏழைகளுக்கானது. நாங்கள் ஆட்சி செய்ய தொடங்கியது முதல் இன்று வரை எவ்வித ஊழலும் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.
காங்கிரஸ் ஆட்சியில் ராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத கவச உடைகள் வழங்கப்படவில்லை. ஆனால் 2016-ல் நாங்கள் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கவச உடைகளை வழங்கி இருக்கிறோம். எங்கள் ஆட்சியின் மீது காங்கிரஸ் கட்சியினர் குறை கூறினார்கள். ஆனால் அவை யாவும் அடிப்படை ஆதாரம் அற்றவை.
காங்கிரஸ் ஆட்சி நடத்தியது முழுக்க முழுக்க வியாபார நோக்கிலும், லாப நோக்கிலும் தான் இருந்தது என குற்றஞ்சாட்டிய மோடி, மெகா கூட்டணி என்ற பெயரில் பல ஊழல்வாதிகளை கொண்ட கூட்டணியை உருவாக்கி வருகிறது காங்கிரஸ் என சுட்டிக் காட்டினார்.
இந்தியாவில் காமன்வெல்த் போட்டிகள் நடந்தபோது, நமது நாட்டின் பெருமையை முன்னிலைப்படுத்துவதற்கு அது ஒரு வாய்ப்பாக அமைந்தது. ஆனால் இவர்கள் அதிலும் தங்கள் சொத்துக்களை அதிகரிப்பதில் கவனத்தை செலுத்தினார்கள்.
காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி ஊழல் நடந்தது. அவர்கள் ஆட்சிக்காலத்தில் தொலைபேசியில் பேசி வங்கிக்கடன்களை அவர்களின் தலைவர்களின் நண்பர்களுக்கு கொடுக்க வைத்தார்கள். அதனால்தான் நமது வங்கி முறையே பெரும் பிரச்சினைகளை சந்தித்தது.
கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தையும், எனது ஆட்சியையும் பாருங்கள். கொள்ளையர்களிடம் இருந்து நாட்டை நாங்கள் மீட்டு வருகிறோம். நாட்டை கொள்ளையடித்தவர்கள், நரேந்திர மோடிக்கு தொடர்ந்து பயந்துதான் ஆக வேண்டும் என மோடி பேசினார்.