சமூக வலை தளங்களில் ஒரு பெரும் பரபரப்பு.. தஞ்சை பெரிய கோவிலில் தமிழ்க் கல்வெட்டு அகற்றம்.. இந்தி மொழி கல்வெட்டுகள் தினிப்பு.. இச் செய்தி உண்மைதானா..? ... இதற்கு பதிலும் சமூக வலைதளங்களிலே கிடைத்துள்ளது. அந்த கட்டுரையை பார்ப்போம்...
ASI கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் இம்மாதிரி செய்ய இயலாது என்று சொன்னால்... ASI தானே ரவிசங்கர் கூட்டத்திற்கு அனுமதி கொடுத்து கூடாரம் அமைத்தார்கள் என்னும் மறுமொழி வருகிறது..
இக் கல்வெட்டுகள் இருநூறு வருடங்களுக்கு முந்தைய மராட்டியர்களின் கல்வெட்டுகள் என்றால்... அப்போ 200 வருடங்களுக்கு முன்பே திணிப்பு ஆரம்பமாகிவிட்டதா..? என்று மறுமொழி வருகிறது..
வடமொழி கல்வெட்டு புகைப்படங்களைப் பார்த்த ஒரு சிலர், பலத்த அதிர்ச்சிக்குள்ளாகி இது தஞ்சை கோவில் கல்வெட்டுகள்தானா.? என்கிறார்கள்.. தஞ்சைக் கோவிலில் வேற்று மொழிக் கல்வெட்டுகள் இருப்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை..
இவர்களின் தமிழ் ஆர்வம், விழிப்புணர்வு, உணர்சி வேகம், உண்மையிலேயே வணங்கி வரவேற்புக்குரிய ஒன்று.. இக்காலத்திற்கு இந்த உஷார் நிலை அவசியத் தேவைதான்..
இக்கல்வெட்டுகளின் தோற்றம்.. விபரம்.. பற்றிய முழுத்தகவல்களையும் சேகரிக்க தஞ்சை பெரியகோவிலுக்குச் சென்றோம்.. பேரரசன் இராஜராஜ சோழனால் தஞ்சை பெரியகோவில் கட்டி முடிக்கப்பட்டு கி.பி. 1010 ல் குடமுழுக்கு செய்யப்பட்டது..
கோவில் பணியாளர் விபரம், கொடுக்கப்பட்ட நிவந்தங்கள், நிர்வாகம், பாதுகாப்பு, மேலும் பல விடயங்கள் கோவில் முழுவதும் கல்வெட்டுச் செய்திகளாக பதிவு செய்யப்பட்டன... இச் செய்திகள் அழகுத்தமிழில் நேர்த்தியான எழுத்துக்களைக் கொண்டு கல்லில் வெட்டப்பட்டது.. இந்த ஒவ்வொறு செய்தியும் ஒரு வரலாற்று ஆவணமாகும்..
பெரியகோவிலில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன.. இவற்றின் பெரும்பகுதி தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி எண் 2 ல் பதிப்பிக்கப்பட்டுள்ளது.. பெரியகோவிலின் தொடக்க அதாவது முதல் கல்வெட்டு, கருவறையின் வடபுற அதிஷ்டானத்தில் தொடங்குகிறது.. சண்டிகேசர் கோவிலுக்கு நேர் எதிரே இக்கல்வெட்டு இருக்கும்...
முதல் வரியே சமஸ்கிருதத்தில்.. அனுஷ்டுப் என்னும் யாப்பில் தொடங்கும்.. ஏதத் விஸ்வ ந்ருபஸ்ரேணி.. என்று வடமொழி சுலோகத்தில் ஆரம்பித்து, திருமகள் போல என்று இராஜராஜரின் மெய்கீர்த்தீயோடு, நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீஸ்வரமுடையார்க்கு , என்று சொல்லி.. நாம் கொடுத்தனவும் ..
என்று ஆரம்பம் ஆகும்..
இதுதான் பெரிய கோவிலின் முதல் கல்வெட்டு..
கோவிலில் இராஜராஜரின் 64 கல்வெட்டுகள், இராஜேந்திரனின் 21, இரண்டாம் இராஜேந்திரரின் 1, முதலாம் குலோத்துங்கனின் 1 ,மூன்றாம் குலோத்துங்கனின் 1 , மூன்றாம் இராஜராஜனின் 1, பாண்டியர் 2, விஜயநகர மற்றும் நாயக்கர் 4, மராட்டியர்கள் 4 கல்வெட்டுகள் கோவிலில் உள்ளன..
இந்த மராட்டியர்களின் மராட்டிய மொழிக் கல்வெட்டுகள்தான் தற்போது சர்ச்சைக்குள்ளாகின்றன... இக்கல்வெட்டு மராட்டிய மொழியில்தான் வெட்டப்பட்டுள்ளன.. ஹிந்தி மொழியில் அல்ல... மராட்டியமும், இந்தியும், தேவநாகரி என்னும் வரிவடிவ அமைப்பில் எழுதப்படுவதால் பார்ப்பதற்கு இரண்டும் ஒரே வடிவமாகத் தோன்றும்.. ஆனால் இரண்டும் வெவ்வேறு..
இந்த மராட்டியர் கல்வெட்டுக்கள் பெரிய கோவிலில் எங்கு உள்ளன..? எப்போதிருந்து உள்ளன.? என்ன செய்தி சொல்கிறது..? சோழர்களின் வீழ்ச்சிக்குப்பிறகு பாண்டியர்கள், பிறகு விஜயநகர நாயக்கர்கள், பிறகு மராட்டியர்கள்..
தஞ்சையின் கடைசி நாயக்க மன்னரான விசயராகவ நாயக்கரை போரில் வென்று மராட்டியரான ஏகோஜி தஞ்சையை கைப்பற்றினார்.. இது நடந்தது கி.பி. 1675.. பிறகு சாஹஜி ( கி.பி. 1684) . முதலாம் சரபோஜி ( 1712) துக்கோஜி ( 1728) ஏகோஜி ( 1736) சுஜான் பாய் ( 1738) பிறகு.. பிரதாபா சிம்மன் 1739 - 1763..இரண்டாம் சரபோஜி ( 1798 - 1832 ) மராட்டியரின் கடைசி இரண்டாம் சிவாஜி ( 1855 ) .. இவருக்கு பிறகு தஞ்சை ஆங்கிலேயர் வசமாயிற்று..
1798 - 1832 வரை ஆட்சி செய்த இரண்டாம் சரபோஜி காலத்தில்தான் மராட்டிய மொழி கல்வெட்டுகள் பெரிய கோவிலில் இடம் பெற்றது..
இக்கல்வெட்டு தரும் செய்திகள்...
பெரியகோவிலில் உள்ள விநாயகர் ஆலயத்தில் வாயிற்படியில் உள்ள கல்வெட்டு, கி.பி. 1801 ல் சரபோஜியால் இவ்வாலயம் கட்டப்பட்ட செய்தியை பதிவு செய்கிறது. .
விநாயகர் கோவிலின் வடக்குப்பகுதியில் உள்ள ஒரு கல்வெட்டு, ஒரு குற்றம் ஒன்றை விசாரித்து கொதிக்கும் நெய்யுனுள் கைகளை விடுமாறு தண்டனை அளித்த செய்தி பதிவானது..
கோவிலின் தென்மேற்குத் திருச்சுற்று மாளிகையில் மிக நீண்டதொரு கல்வெட்டு இருக்கிறது.. பெரியகோவிலிலே இதுதான் மிக நீண்ட கல்வெட்டாகும்..இக்கல்வெட்டில் மராட்டிய வம்சாவளி முழுவதும் எழுதப்பட்டுள்ளது. இதை போன்ஸ்லே வம்ச சரித்திரம் என்பார்கள்.. மருது சகோதரர்களை கைது செய்ய ஆங்கிலேயர்களுக்கு சரபோஜி படை உதவியும், பண உதவியும் செய்தார் என்ற செய்தியும் இருக்கிறது...
விநாயகர் கோவில் வடக்குச் சுவற்றில் உள்ள மேலும் சில கல்வெட்டுகள், மகோவிலை பராமரிப்பு செய்தது, தரைத்தளம் அமைத்தது, நிவந்தங்கள், வழிபாடுகள், முருகன் கோவில் கோபுர சுதை வேலை செய்தது, வண்ணம் பூசி, புது கலசம் அமைத்து குடமுழுக்கு செய்தது, மேலும் பல கோவில் திருப்பணிகளை பதிவு செய்கின்றன...
ஆக.. இந்த மராட்டிய மொழிக்கல்வெட்டுகள் கி.பி. 1801 முதல் சுமார் 218 வருடங்களாக பல வரலாற்று சம்பவங்களை சுமந்து கொண்டு இக்கோவிலில் இருக்கின்றன.. இவை இடைச் செருகலும் அல்ல.. இந்தி மொழியும் அல்ல.. வரலாற்று சாசனங்கள் என்பதுதான் நிஜம்..
அன்புடன்.. மா.மாரிராஜன்.. சோழர் வரலாற்று ஆய்வு சங்கம்.... என்று அந்த பதிவு முடிகிறது.
எழுத்து - மா.மாரிராஜன்
புகைப்படங்கள் - ரா.பாரதி ராஜேந்திரன்..