தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு .!
Chance of heavy rain 6 district of Tamil Nadu
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
நேற்று அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று காலை அக்டோபர் 22ஆம் தேதி தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் போர்ட் பிளேர்க்கும், மேற்கு-வடமேற்கு திசையில் 110 கிலோமீட்டர் தொலைவிலும், சாகர் தீவுக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் 1460 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் அக்டோபர் 23ஆம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும். பின்னர் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் அக்டோபர் 24ஆம் தேதி காலை புயலாக வலுப்பெறக்கூடும். அதன் பின்னர் வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 25ஆம் தேதி அதிகாலை வங்கதேச கடற்கரையில் டிங்கோனா தீவு மற்றும் சந்திவிப் இடையில் கரையை கடக்கும்.
இதனால் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதன்படி தமிழகத்தில் இன்று நீலகிரி, ஈரோடு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், மற்றும் செங்கல்பட்டு ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை பொறுத்த வரை அதிகபட்சமாக 32-33 டிகிரி செல்சியஸ் அளவிலும், குறைந்தபட்சமாக 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
English Summary
Chance of heavy rain 6 district of Tamil Nadu