உதயநிதி ஓய்வு எடுக்க வந்த இடத்தில் திமுக தொண்டர்களுக்கிடையே அடிதடி!
Udhayanidhi came guests house and clash between DMK members
சென்னை திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும் திமுகவின் இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உலக மீனவர்கள் தின நிகழ்ச்சியிலும் கட்சி அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள சென்றுள்ளார். அவருக்கு காவல்கிணறு விளக்கு ஜங்ஷன் பகுதியில் அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் கன்னியாகுமரி மேயர், திமுகவின் தொண்டர்கள், திமுக இளைஞர்களின் தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
பின்னர் கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுப்பதற்காக உதயநிதி ஸ்டாலினுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பொழுது திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அவரை பார்ப்பதற்காக சென்று உள்ளனர். அப்பொழுது உள்ளே இருந்த இளைஞர் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் அவர்களை அனுமதிக்காமல் கதவு பூட்டியதாக சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக திமுகவின் இளைஞரணி தொண்டர்களுக்கும் திமுகவின் தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொண்டர்களுக்கு இடையே சாதாரணமாக ஆரம்பித்த தள்ளுமுள்ளு அடிதடியாக மாறியது. இதனால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். உதயநிதி ஸ்டாலின் அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் மேல் தளத்தில் ஓய்வெடுக்க, கீழ் தளத்தில் திமுக தொண்டர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இதனை படம் பிடித்த செய்தியாளர்களின் செல்போன்களையும் கேமராக்களையும் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் பிடுங்கி உடைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் மூத்த நிர்வாகிகளும் தொண்டர்களுக்கு இடையே சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். திமுக தொண்டர்களிடையே ஏற்பட்ட இந்த மோதலால் விருந்தினர் மாளிகை பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
English Summary
Udhayanidhi came guests house and clash between DMK members