வெளிநாட்டிலிருந்து கொலை மிரட்டல்.. பதறிய எஸ்.வி சேகர்.. காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்..!!
Sve shekar complained police station for receiving death threats from abroad
பாஜக ஆதரவாளரும் பிரபல இயக்குனரும், நடிகருமான எஸ்.வி சேகருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற பொது தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.
இந்த தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்ததை அடுத்து பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பாஜக ஆதரவாளரும் பிரபல இயக்குனரும் நடிகருமான எஸ்.வி சேகர் செய்தி ஊடகத்திற்கு பேட்டியில் கர்நாடக மாநில தேர்தலில் பாஜக தலைவர்களின் பங்களிப்பு குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
அவரின் இத்தகைய விமர்சனத்திற்கு வெளிநாட்டில் இருந்து ராமலட்சுமி முருகன் என்பவர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னை பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகர் எஸ்.வி சேகர் புகார் அளித்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வருவதாக எஸ்.வி சேகர் புகார் அளித்துள்ளார். சம்பந்தப்பட்ட நபர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அண்மையில் தமிழ்நாடு பாஜகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசலை தொடர்ந்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது நேரடியாகவும் மறைமுகமாக ட்விட்டரில் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Sve shekar complained police station for receiving death threats from abroad