பலத்த காற்று, உயர்ந்த அலைகள்...! விவேகானந்தர் மண்டபம் படகுச் சேவைக்கு தற்காலிக பூட்டு...!
Strong winds high waves Vivekananda Mandapam boat service temporarily closed
சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரி, ஆண்டுதோறும் மட்டுமல்ல தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளையும் பக்தர்களையும் ஈர்த்து வருகிறது. இங்கு வருகை தரும் பயணிகள் முதலில் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி, பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்து ஆன்மிக அனுபவம் பெறுகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, கடலின் நடுவே கம்பீரமாக நிற்கும் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயரத்தில் வானளாவ உயர்ந்துள்ள திருவள்ளுவர் சிலையைப் பார்வையிட படகுச் சேவையை நாடுவது வழக்கமாக உள்ளது.

இந்த தேவையை பூர்த்தி செய்ய பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளையின்றி படகுகளை இயக்கி வந்தது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கும், சபரிமலை சீசனில் வருகை தரும் ஐயப்ப பக்தர்களுக்கும் இது பெரும் வசதியாக இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக கன்னியாகுமரி கடற்பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய கடும் அலைச்சல் நிலவி வருகிறது.
வானிலை திடீரென மோசமடைந்ததைத் தொடர்ந்து, பயணிகளின் பாதுகாப்பை முதன்மையாகக் கருத்தில் கொண்டு விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்குச் செல்லும் படகுச் சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக பூம்புகார் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஐயப்ப பக்தர்கள் பெருமளவில் குவிந்திருந்த சூழலில், படகுச் சேவை நிறுத்தப்பட்ட செய்தி அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வானிலை சீரடைந்ததும் மீண்டும் படகுச் சேவை தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Strong winds high waves Vivekananda Mandapam boat service temporarily closed