புதுக்கோட்டை மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்!
Pudukottai fishermen protest against arrest of Sri Lankan navy
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகங்களில் இருந்த நாள்தோறும் 550 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றனர். இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 10,000க்கும் மீனவர்களின் வாழ்வாதாரம் உள்ளது.
இந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி சர்வதேச கடல் எல்லை அருகே இந்திய கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் 24 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
மேலும் அவர்கள் சென்ற ஐந்து விசைப்படகுகளையும் சிறை பிடித்து சென்றனர். இலங்கை கடற்படையினரின் இத்தகைய செயல் புதுக்கோட்டை மீனவர்கள் இடையே பெரும் அச்சத்தை உண்டாக்கியுள்ளது. இதன் காரணமாக சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் விசைப்படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்தனர்..
அதன்படி இன்று காலை முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் புதுக்கோட்டை மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறலை கண்டித்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தால் விசைப்படகுகள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக 10, 000க்கும் மேற்பட்ட மீனவ தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மத்திய - மாநில அரசுகள் உடனடியாக கைது செய்யப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
Pudukottai fishermen protest against arrest of Sri Lankan navy