தூத்துக்குடியில் போதைப்பொருள் மாஃபியாவுக்கு போலீஸ் அதிரடி - 3 நாட்களில் ரூ.1.50 கோடி கஞ்சா ஆயில் பறிமுதல்...!
Police launch major crackdown drug mafia Thoothukudi Ganja oil worth 1point50 crore seized 3 days
தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பில் காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட தொடர் ரோந்து பணியின் விளைவாக, கடந்த 3 நாட்களில் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள கஞ்சா ஆயில் பறிமுதல் செய்யப்பட்டு, 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 7.1.2026 அன்று தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தாளமுத்துநகர் பகுதியில் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தியதில், கஞ்சா ஆயில் வைத்திருந்த 2 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள கஞ்சா ஆயில் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதனைத் தொடர்ந்து, 8.1.2026 அன்று தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா ஆயில் வைத்திருந்த மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள கஞ்சா ஆயில் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்தும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும், துரிதமாக செயல்பட்டு குறுகிய காலத்தில் பெரும் அளவிலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினரை, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் நேரில் பாராட்டினார்.
மேலும், கஞ்சா, குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில், தமிழ்நாடு அரசு “DrugFreeTN” என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் பொதுமக்கள், தங்களது விவரங்களை வெளியிடாமல் (anonymous) போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை குறித்த தகவல்களை தயங்காமல் புகார் அளிக்கலாம்.
புகாரளிப்பவர்களின் விவரங்கள் முழுமையாக ரகசியமாக பாதுகாக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் மற்றும் வாங்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை தொடரும் என மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் எச்சரித்துள்ளார்.
English Summary
Police launch major crackdown drug mafia Thoothukudi Ganja oil worth 1point50 crore seized 3 days