ஒரு சத்தம்… ஒன்பது உயிர்கள்! - டயர் வெடித்து அரசு பஸ் கோர விபத்து...!
One sound nine lives lost horrific accident involving government bus after tire burst
மதுரையிலிருந்து சென்னை நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்து, கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே எழுத்தூரில் நேற்று இரவு 7.15 மணியளவில் கோர விபத்தில் சிக்கியது. பஸ்சின் முன்பக்க வலது டயர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்ததால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தடுப்புச்சுவரை தாண்டி மறுமார்க்க சாலையில் பாய்ந்தது.
அப்போது சென்னை–திருச்சி சாலையில் சென்ற 2 கார்கள் மீது மோதிய பஸ், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து நின்றது. விபத்தின் தாக்கத்தில் கார்கள் அப்பளம் போல நொறுங்கின. கார்களில் சிக்கியவர்கள் அலறல் சத்தம் எழுப்ப, பொதுமக்கள் மீட்பு முயற்சியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து தீயணைப்பு மற்றும் போலீசார் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 பேர் உயிரிழந்தனர்.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 6 பேரில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஒரு குழந்தை மற்றும் முதியவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.
4 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் கரூர் மற்றும் திருச்சி பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் கனடா செல்ல இருந்த உறவினரை வழியனுப்பி திரும்பிய போது இந்த விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகி சோகத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக அரசு பேருந்து ஓட்டுநர் தாஹா அலி மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
One sound nine lives lost horrific accident involving government bus after tire burst