வாசலில் தூங்கிய மூதாட்டி கொலை! மர்ம கொள்ளையர்களை தேடும் காவலர்கள்...! நடந்தது என்ன...?
old woman sleeping door murdered police looking mysterious robbers What happened
சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியை அடுத்த வேம்படிதாளம் இந்திராநகர் பகுதியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.அங்கு வசித்து வந்தவர் மாரியம்மாள் (85). இவரின் மறைந்த கணவர் தங்கவேல், ரெயில்வேயில் பணியாற்றியவர். கணவர் இறந்தபின், வாரிசு அடிப்படையில் இவரின் மகன் தனபால் (56) ரெயில்வேயில் கீமேன் பணியில் சேர்ந்து தற்போது சேலம் ரெயில் நிலையத்தில் வேலை செய்து வருகிறார்.

மேலும், தனபால் தனது தாயார் மாரியம்மாளும் மனைவியுமுடன் வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, மாரியம்மாள் வழக்கம்போல் வீட்டின் வாசலில் படுத்து தூங்கினார். மகன், மருமகள் இருவரும் வீட்டுக்குள் இருந்தனர்.அடுத்த நாள் அதிகாலை, தனபால் வெளியில் வந்தபோது அதிர்ச்சியில் உறைந்தார்.
தனது தாயார் மாரியம்மாள், தலையில் பலத்த அடிபட்ட காயத்துடன் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்தார். உடனே அவர் கொண்டலாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.மேலும் காவலர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
அதில், இரவு நேரத்தில் மர்மநபர்கள் மூதாட்டியை தாக்கி கொன்றுவிட்டு, இரு காதுகளிலிருந்த தோடு, மூக்குத்தி (மொத்தம் 6 கிராம் தங்கம்) மற்றும் கால்களில் இருந்த 200 கிராம் வெள்ளி காப்பை பறித்து தப்பியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். அப்பகுதி மக்கள், “இப்படி மூதாட்டிகளைக் கூட விட்டு வைக்கவில்லை!” என்று கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.சேலம் நகரில் இந்த கொடூரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
old woman sleeping door murdered police looking mysterious robbers What happened