ஒருதலை காதல் - வேறொருவருடன் நிச்சயமான பெண்ணை கடத்த முயன்ற போலீசார் கைது.!
near tirunelveli police officer arrested for kidnape woman
திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகே கல்யாணிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முப்புடாதி மகன் மாரியப்பன். போலீஸ்கரராக பணிபுரியும் இவர் கடையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை ஒருதலை பட்சமாக காதலித்து வந்துள்ளார். அவர் தருமபுரி மாவட்டம் கடத்தூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.
அவரிடம் மாரியப்பன் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அந்த பெண்ணின் பெற்றோரிடமும் சென்று திருமணத்திற்கு கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் திருமணம் செய்து வைப்பதற்கு சம்மதிக்கவில்லை. இந்த நிலையில் அந்த இளம்பெண் விடுமுறையில் தன் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
அப்போது அந்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயமாகி உள்ளது. இதையறிந்த மாரியப்பன் நேற்று இரவு தன்னுடன் பணிபுரியும் சக போலீஸ்காரர் மற்றும் தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த இளம்பெண்ணை கடத்த முயன்றுள்ளார். இதை தடுக்க வந்த அவரது பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு இளம்பெண்ணை இழுத்து சென்றுள்ளார்.
இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மாரியப்பனை மடக்கி பிடித்துள்ளனர். அதன் பின்னர் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாரியப்பனை அழைத்து சென்று விசாரணை செய்தனர்.
அந்த விசாரணையில் மாரியப்பன் அந்த பெண்ணின் சம்மதம் இல்லாமல் அவரை வலுக்கட்டாயமாக கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அவரது நண்பர்கள் மூன்று பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
English Summary
near tirunelveli police officer arrested for kidnape woman