#BREAKING:: சென்னையில் வி.பி சிங்கிற்கு முழு உருவ வெண்கல சிலை.. 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு..!!
MKStalin announced fullnlength bronze statue for VP Singh in Chennai
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கையின் மீதான விவாத கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்றது. அப்பொழுது தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் 110 விதியின் கீழ் சென்னையில் முன்னாள் பிரதமர் வி.பி சிங்கிற்க்கு முழு உருவ சிலை அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியதாவது "பட்டிலின மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டபோது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர்களின் மக்கள் தொகை ஏற்ப இட ஒதுக்கீடு தரப்படவில்லை. இதனை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தான் பி.பி மண்டல் தலைமையிலான ஆணையம்.
சமூக ரீதியாகவும் கல்வியிலும் பின் தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் சமூகத்திற்கு மண்டல் பரிந்துரையின் படி மத்திய அரசு பணியிடங்களில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்ற உத்தரவை அமல்படுத்திய சமூகநீதி காவலர்தான் வி.பி சிங் அவர்கள். அவர் பிறப்பால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் அல்ல. ஏழை எளிய குடும்பத்தை சார்ந்தவரும் அல்ல. மண்டல் ஆணையத்தின் பரிந்துரையை அமல்படுத்தப் போகிறேன் என்று ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் வி.பி சிங் அறிவித்த பொழுது முற்பட்ட சாதியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் இதை செய்ய முடியாது என சொன்ன போது இதோ இப்பொழுதே தேதியை சொல்கிறேன் என்று சொன்ன கம்பீரத்திற்கு சொந்தக்காரர் வி.பி சிங் அவர்கள்.
அதுதான் அவரின் பதவிக்கு நெருக்கடியாக அமைந்தது. சில நேரங்களில் வாழ்வதை காட்டிலும் மரணத்தை தேர்ந்தெடுப்பதே நல்லதே என்று சொல்லி பிரதமர் பதவியை விட்டு விலகியவர் சுயமரியாதை சுடரொளி வி.பி சிங் அவர்கள். வி.பி சிங்கை தூக்கில் கூட போட்டுக் கொள்ளுங்கள். ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நீதியை கொடுங்கள் என்று சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின் தங்கிய வகுப்பினரின் நலனில் அக்கறை கொண்டிருந்தார்.
பதவியில் இருந்த 11 மாத காலத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு, தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கான தொடக்க புள்ளி, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான தொடக்க புள்ளி, வேலை வாய்ப்பு உரிமையை அரசியல் சாசன உரிமையாக்கியது, தேர்தல் சீர்திருத்தங்கள், மாநிலங்களுக்கு இடையான கவுன்சில், தேசிய பாதுகாப்பு குழு உழவர்களின் பிரச்சனையை தீர்க்க மூன்று குழுக்கள், டெல்லி குடிசை பகுதி மக்களுக்கு வாழ்விடங்கள், அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை குறிப்பிடுவது கட்டாயம், நுகர்வோர் பாதுகாப்பு என அனைத்தையும் செய்து காட்டிய மாபெரும் சாதனையாளர் தான் விபி சிங் அவர்கள்.
தமிழ்நாட்டை தனது ரத்த சொந்தங்கள் வாழும் மாநிலமாக வி.பி சிங் அவர்கள் நினைத்தார். தமிழ்நாட்டு மக்களின் உயிர் பிரச்சனையான காவேரி நதிநீர் பங்கேற்க நடுவர் மன்ற ஆணையத்தை அமைத்து தந்தவர் விபி சிங் அவர்கள். சென்னையில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் அப்போதைய முதல்வர் கருணாநிதி அவர்களின் வேண்டுகோளை ஏற்று உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராஜர் அவர்களின் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத்திற்கு அறிஞர் அண்ணா பெயரையும் சூட்டிய ஒப்பற்ற தலைவரான வி.பி சிங் அவர்களின் நினைவை போற்றும் வகையிலும் தமிழ் சமூகத்தின் நன்றியை தெரிவிக்கும் வகையிலும் சென்னையில் வி.பி சிங் அவர்களுக்கு முழு உருவ வெங்கல சிலை அமைக்கப்படும் என்பதை இந்த மாமன்றத்தில் அறிவிக்க விரும்புகிறேன்" என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
English Summary
MKStalin announced fullnlength bronze statue for VP Singh in Chennai