உயர்த்தியுள்ள மின்கட்டணத்தை மறு அறிவிப்பு வரும் வரை செலுத்தமாட்டோம் - விசைத்தறியாளர்கள்.!
Keyweavers will not pay electricity bill till further notice
உயர்த்தியுள்ள மின்கட்டணத்தை மறு அறிவிப்பு வரும் வரை செலுத்தமாட்டோம் என்று விசைத்தறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கோவை, திருப்பூர் மாவட்டதில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள், சோமனூர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது,
சாதாரண விசைத்தறிக்கு மின் கட்டண உயர்வில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கக்கோரி கோவை, திருப்பூர் மாவட்ட கூட்டமைப்பு முடிவின்படி கடந்த கடந்த 16-ந்தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ., முயற்சியால் தமிழக மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜியை கோவை, திருப்பூர் மாவட்ட கூட்டமைப்பு நிர்வாகிகள் நேரில் சந்தித்து சாதாரண விசைத்தறிக்கு உயர்த்தியுள்ள கட்டணத்தை குறைத்து வழங்கி விசைத்தறி தொழிலை பாதுகாக்க வலியுறுத்தினோம்.
இதற்கு மின்துறை அமைச்சரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசி விரைவில் நல்ல முடிவை அறிவிப்பதாக தெரிவித்தார். இதனால் மின்துறை அமைச்சர் உறுதியின் பேரில் கடந்த 7 நாட்களாக நடைபெற்று வந்த வேலைநிறுத்தப் போராட்டம் விலக்கிக்கொள்ளப்படுகிறது.
ஆனால் உயர்த்தியுள்ள மின்கட்டணத்தை மறு அறிவிப்பு வரும் வரை செலுத்துவதில்லை என்றும், விசைத்தறியாளர்களுக்கு நல்லதோர் மறுஅறிவிப்பு வரும் வரை தமிழக மின்சார வாரியம் மேல்நடவடிக்கை எதுவும் எடுக்காமல், விசைத்தறியாளர்களையும், பல லட்சம் விசைத்தறி தொழில் சார்ந்த தொழிலாளர் குடும்பங்களையும் காப்பாற்ற வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Keyweavers will not pay electricity bill till further notice