பாலின நிகர் மேம்பாடு மற்றும் ஆய்வகம்! சென்னையில் திறந்து வைத்தார் மாநகராட்சி மேயர்.!
Gender and policy lab
சென்னையில் பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகத்தை மாநகராட்சி மேயர் பிரியா இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள கருத்தரங்கில் பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகம் (Gender and Policy Lab) மற்றும் பயிற்சி கருத்தரங்கினை மாண்புமிகு பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் இன்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
பின்னர் கருத்தரங்கில் பேசிய மேயர் பிரியா,
பாலின மேம்பாட்டு ஆய்வகத்தை தொடங்கி வைக்க எனக்கு சிறந்த வாய்ப்பினை வழங்கியமைக்காக நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
உலகளவில் நகர்ப்புற திட்டமிடல் மற்றும் வடிவமைப்பினை முடிவெடுப்பதில் பெண்களின் தேவைகள் கருத்தில் எடுக்கப்பட வேண்டும். மேலும், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளின் தேவைகளை நகரங்கள் முழுமையாக நிவர்த்தி செய்ய வேண்டும்.
பெண்களின் வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள், பொது போக்குவரத்தை அணுகுவது போன்றவை நடைமுறையில் உள்ள சமூக விதிமுறைகளால் கட்டுப்படுத்துகின்றன.
நகர்ப்புற திட்டமிடலில் பெண்கள் குறைவாகவே பயன்படுத்தப்படுகிறார்கள். அது மட்டுமல்லாது முடிவெடுப்பதில் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை. பெண்களுக்கான சமமான வளர்ச்சியினை ஊக்குவிக்க இந்திய நகரங்களின் திட்டமிடல் மற்றும் இதர பாலினங்களின் தேவைக்கான பொது இடங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
உலக வங்கியின் உதவியுடன் செயல்படுத்தப்படும் “சென்னை மாநகர கூட்டமைப்பு திட்டம்” மற்றும் இந்திய அரசின் “நிர்பயா திட்டங்களின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சியில் தமிழ்நாடு அரசின் மூலம் “பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகம்” (Gender and Policy Lab) உருவாக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 2022 முதல் மூன்று அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இதற்கான பணி நடைபெற்று வருகிறது.
பாலினநிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகமானது நிர்பயா திட்டத்தினை கண்காணிக்கவும், இதற்கு தேவையான கொள்கைள் மற்றும் அதற்கான விழிப்புணர்வை உருவாக்கவும், பொது இடங்கள் மற்றும் பொது போக்குவரத்தை பெண்களுக்கு பாதுகாப்பானதாகவும், ஏற்றதாகவும் மாற்றும் வகையில் செயல்படும். மேலும், வரும் மூன்று ஆண்டுகளில் பலதுறைகளில் இதற்கான முயற்சியை செயல்படுத்தும் அமைப்பாகவும் செயல்படும்.
இதன் முதற்கட்டமாக பாலினநிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகமானது பெருநகர சென்னை மாநகராட்சியில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் சிறப்புடன் செயல்பட என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பெருநகர சென்னை காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், மாநகராட்சி ஆணையர் மற்றும் பலர் கலந்து கொண்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.