ஆசிரியர்களின் நலன் காக்கும் அரண் அதிமுக.. கோரிக்கையை நிறைவேற்றுங்கள்.. மு.க ஸ்டாலினுக்கு ஈபிஎஸ் வலியுறுத்தல்..!!
EPS supports TN primary school teachers strike
தமிழகம் முழுவதும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் ரங்கராஜன் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் சீனிவாசன், ராஜாராம், அண்ணாமலை, கலைச்செல்வி உள்பட 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "அறிவார்ந்த இளைய சமுதாயத்தை உருவாக்க தங்கள் வாழ்வின் பெரும்பகுதியை அர்ப்பணித்து வரும் ஆசிரியர் பணி என்பது அறம் சார் பணி, அச்சிறப்பான பணியில் பெரும் பங்காற்றுபவர்களான தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சார்பாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஜனநாயக முறையில் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தும் போராட்டங்களை இந்த அரசு முடக்கக்கூடாது.
ஆட்சியில் இல்லாத போது ஒரு பேச்சு, ஆட்சியில் இருக்கும் போது ஆணவத்துடன் ஒரு பேச்சு எனும் இரட்டை நிலைப்பாட்டை கைவிட்டு முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களே தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் கூட்டமைப்பை அழைத்து நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துவதுடன், ஆசிரியர்களின் நலன் காக்கும் அரணாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் துணை நிற்கும் எனவும் உறுதியளிக்கிறேன்." என பதிவிட்டுள்ளார்.
English Summary
EPS supports TN primary school teachers strike