மாவட்ட பஞ்சாயத்து தலைவரின் அட்டகாசத்தால் ராதாபுரம் யூனியன் அலுவலகத்தில் கதறியழும் திமுக பெண் கவுன்சிலர்!
DMK woman councilor crying in Radhapuram union office
நெல்லை மாவட்டம் ராதாபுரம் யூனியன் தலைவராக திமுகவை சேர்ந்த சௌமியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். யூனியன் துணைத்தலைவர் இளையபெருமாள் இருந்து வருகிறார். யூனியன் தலைவர் சௌமியாவின் கணவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருந்து வருகிறார். ஜெகதீஷ் அட்டகாசம் தாங்க முடியாமல் ராதாபுரம் யூனியன் பெண் கவுன்சிலர்கள் கதறி அழுகின்றனர். பெண் கவுன்சிலர்களை ஆபாசமாக திட்டுவது, தரக்குறைவாக நடத்துவது, பேசுவதை பதிவு செய்து அனைவரின் முன்னிலையில் போட்டு காட்டுவது என பல கொடுமைகளை ராதாபுரம் யூனியன் தலைவரின் கணவர் அரங்கேற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெண் கவுன்சிலர்களைப் பற்றி சமூக வலைதளங்களில் பதிவிடுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. ராதாபுரம் யூனியன் சேர்மன் கூட்டத்தை யூனியன் தலைவர் சௌமியா நடத்தாமல் அவருடைய கணவர் மாவட்ட தலைவராக இருக்கும் ஜெகதீஷ் கூட்டத்தை நடத்துவதாகவும் பெண் கவுன்சிலர்கள் புகார் அளித்துள்ளனர். பெண் கவுன்சிலர்கள் கொண்டு வரும் தீர்மானங்களை நிறைவேற்ற விடாமல் தடுப்பதாகவும், மக்களுக்கான எந்த ஒரு நல்ல திட்டங்களையும் செயல்படுத்த விடாமல் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தடுத்து விடுவதாக பெண் கவுன்சிலர்கள் குமுறுகின்றனர்.
ராதாபுரம் யூனியனில் பெண் கவுன்சிலர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. எனவே முதல்வர் ஸ்டாலின் இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என 15 வது வார்டு கவுன்சிலர் பிரேமா கேட்டுக் கொண்டுள்ளார். இன்று நடைபெற்ற கூட்டத்தின் போது பெண் கவுன்சிலர்கள் யூனியன் அலுவலகம் வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடும் பொழுது 12வது வார்டு பெண் கவுன்சிலரை காலால் எட்டி உதைத்து அராஜகத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
English Summary
DMK woman councilor crying in Radhapuram union office