பைனான்சியர் வீட்டை பிரித்து மேய்ந்த கொள்ளையர்கள்! தீவிர விசாரணையில் போலீசார்!
Dindigul financier house robbers Police investigation
திண்டுக்கல், ரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 75). இவரது மனைவி ஈஸ்வரி. இதே பகுதியில் இவர்களுக்கு சொந்தமான வீடு உள்ளது. இவர்களது வீட்டில் மேல் மாடியில் செவிலியர் ஒருவர் வாடகைக்கு இருந்தார்.
மேலும் வேலுச்சாமி குடும்பத்துடன் ஆந்திராவில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இதனால் வேலுச்சாமி வீட்டை பூட்டிவிட்டு ஆந்திராவில் தங்கி இருந்து எப்போதாவது விடுமுறைக்கு மட்டும் திண்டுக்கல் வந்து செல்வார்.
இந்நிலையில் இவரது வீட்டின் கதவு நேற்று இரவு உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்து பீரோவில் இருந்த தங்கம், வெள்ளி நகைகளையும் கொள்ளையடித்து சென்றனர்.
இதனை அடுத்து கொள்ளையர்கள் மாடியில் குடியிருந்த செவிலியர் வீட்டிலும் கொள்ளை அடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அங்கு எதுவும் இல்லாததால் மற்றொரு வீட்டின் வாசலில் கட்டி இருந்த 2 செயல்களை திருடி தப்பி சென்றனர்.
அதிகாலையில் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வேலுச்சாமியின் வீடு திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அங்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதனால் உடனடியாக வேலுச்சாமியை தொடர்பு கொண்டு கேட்டபோது பீரோவில் 3 சவரன் தங்க நகை, 3 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 3000 பணம் வைத்திருந்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட இடத்தில் இருந்த கைரேகைகளை சேகரித்து ஆய்வு நடத்தினர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Dindigul financier house robbers Police investigation