மதுகுடித்து வீட்டிற்கு வந்த மகன் மர்ம முறையில் மரணம்: பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி!
Dindigul father beat his son death
திண்டுக்கல், வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60) இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு சரத்குமார் (வயது 25) என்ற மகனும் சங்கீதா என்ற மகளும் உள்ளனர்.
சரத்குமார் தனியார் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. சரத்குமாருக்கு குடிப்பழக்கம் இருப்பதால் அடிக்கடி மது அருந்திவிட்டு தந்தையிடம் தகராறு செய்வார்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு மது போதையில் வீட்டிற்கு வந்து தந்தை மற்றும் சகோதரியை தரக்குறைவான வார்த்தைகளில் திட்டி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் சரத்குமாரை அவரது தந்தை ஒரு அறைக்குள் வைத்து பூட்டிவிட்டு மறுநாள் காலையில் சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் உயிரிழந்து கிடந்துள்ளார். இது தொடர்பாக வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரத்குமாரின் உடலை பார்த்தபோது, பின் தலையில் பலத்த ரத்த காயம் இருந்தது தெரியவந்தது.
இது குறித்து கேட்ட போது அவரது தந்தை ஆறுமுகம், வீட்டிற்குள் அடைத்து வைத்ததால் மேற்கூரை வழியாக தப்ப முயன்றதாகவும் அப்போது தலையில் காயம் ஏற்பட்டு இறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் போலீசார் சந்தேகம் அடைந்து சரத்குமாரின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனையின் முடிவில் சரத்குமார் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. பின்னர் போலீசார் ஆறுமுகத்திடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதனை தொடர்ந்து போலீசார் ஆறுமுகத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். மது அருந்திவிட்டு தகராறு செய்த மகனை தந்தை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Dindigul father beat his son death