சுற்றுச் சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்கள் பற்றிய 2 நாள் கருத்தரங்கம்.! நாளை துவங்க உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பொருட்கள் பற்றிய தேசிய கண்காட்சி மற்றும் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம் நாளை தொடங்க உள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதியன்று, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் அரசாணை எண் 84-ல் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை 2019 ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் பயன்படுத்த தடைவிதித்தது. 

ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதைத் தவிர்ப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் 23.12.2021 அன்று “மீண்டும் மஞ்சப்பை” பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார், 

அதைத் தொடர்ந்து, இந்திய அரசின் சுற்றுச் சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் கடந்த ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஒருமுறை மட்டும் பயன் படுத்தப்படும் சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைசெய்துள்ளது.

மேற்கண்ட சூழ்நிலையில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளுக்கு மாற்று பொருட்களை உற்பத்தி செய்யும் தயாரிப்பாளர்களின் தயாரிப்புகளை காட்சிப்படுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்குவதற்கும், பல்வேறு மாற்று பொருட்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாறுபாடு அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியோருடன் இணைந்து தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், ஒருமுறை மட்டும் பயன் படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பொருட்களுக்கான தேசிய கண்காட்சி மற்றும் தொழில் முனைவோர் கருத்தரங்கம் 2022-ஐ நடத்தவுள்ளது. 

இக்கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் செப்டம்பர் 26 மற்றும் 27 தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தகமையத்தில் நடைபெற உள்ளது. இத்தகைய கண்காட்சி இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் நடத்தப்படுகிறது.

நாடுமுழுவதிலும், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கான மாற்று பொருட்களாக வாழை இலை, நார்/அரிசிதவிடு/அரிசிமட்டை/விவசாயபொருட்கள், பாக்கு இலைபொருட்கள், தேங்காய்மட்டை பொருட்கள் தென்னைநார் பொருட்கள், மட்பாண்ட பொருட்கள், பனைபொருட்கள் துணி/சணல் பொருட்கள், போன்றவைகளை உற்பத்தி செய்யும் தயாரிப்பாளர்கள் தங்கள் தயாரிப்புப் பொருட்களை காட்சிப்படுத்தும் 150 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் தயாரிப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் இயந்திரங்களையும் அவர்கள் காட்சிப்படுத்த உள்ளார்கள்.

இந்நிகழ்வின் இரண்டு நாட்களில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளுக்கான மாற்றுப் பொருட்கள், பிளாஸ்டிக்கழிவு மேலாண்மை மற்றும் காற்றுமாசு மேலாண்மை ஆகியவை பற்றிய ஐந்து தொடக்க தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

மேலும் தொழில் முனைவோர் நிதி ஆதாரங்களை பெறுவதற்கு ஏதுவாக நிதிநிறுவனங்களுடன் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளுக்கு மாற்று பொருட்களை உற்பத்தி செய்பவர்களையும் மற்றும் அவற்றை வாங்குபவர்களை அடையாளம் காணவும் இந்தகண்காட்சி வாய்ப்பளிக்கும்.

முதல் நாளான 26/09/2022 அன்று தேசிய கண்காட்சியை, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் திருமதி. சுப்ரியா சாஹீ, ஐ.ஏ.எஸ் அவர்கள், ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்தின் கூடுதல் செயலாளர் திரு. நரேஷ் பால் கங்வார், ஐ.ஏ.எஸ் அவர்கள் மற்றும் தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவர் முனைவர் மு. ஜெயந்தி, ஐ.எப்.எஸ் அவர்கள் முன்னிலையில் தமிழக அரசின் சுற்றுச்சூழல் கால நிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.சிவ.வீ. மெய்யநாதன் அவர்கள், துவக்கி வைக்க உள்ளார்கள்.

மேலும் தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் தொகுக்கப்பட்ட தமிழகத்தில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான சுற்றுச்சூழல் மாற்றுப் பொருட்களின் உற்பத்தியாளர்களின் கோப்பகம் இக்கண்காட்சியின்போது அறிமுகப்படுத்தப்படும்.

இரண்டாவது நாளான 27.09.2022 அன்று ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளுக்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்களுக்கும் மற்றும் காற்று தர மேலாண்மைக்கான தொழில் முனைவோருக்கான கருத்தரங்கையும் தமிழக அரசின் சுற்றுச்சூழல் பருவநிலைமாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. சிவ. வீ. மெய்யநாதன் அவர்கள், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல்தலைமை செயலாளர் திருமதி சுப்ரியா சாஹீ, ஐ.ஏ.எஸ் அவர்கள் மற்றும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவர் ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு. தன்மய் குமார், ஐ.ஏ.எஸ் மற்றும் தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் உறுப்பினர் செயலர் திரு. இரா. கண்ணன் அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்தின் இணை அமைச்சர் திரு. அஸ்வினி குமார், சௌபே அவர்கள், துவக்கி வைப்பார்கள்.

இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் செயலாளர்கள், மாநில அரசுகளின் பல்வேறு துறைகளை சார்ந்த செயலாளர்கள் மற்றும் பல்வேறு மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர் செயலர்கள் உட்பட பல முக்கிய பிரமுகர்களும் இந்த கண்காட்சியில் கலந்து கொள்கிறார்கள்.

இந்த தேசிய கண்காட்சி பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளுக்கான சுற்றுச் சூழலுக்கு உகந்த மாற்று பொருட்களை தயாரிக்க முற்படும் தொழில் முனைவோர்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள், கல்யாண மண்டபங்கள், திரையரங்குகள் போன்ற வணிகங்களில் ஈடுபடும் நபர்கள் உட்பட அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், இதில் கலந்து கொள்ள அனைவருக்கும் அனுமதி இலவசம்.

மேலும் இக்கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளுக்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பொருட்கள் பற்றியும் மற்றும் அதன் தயாரிப்பு முறை மற்றும் காற்றுதர மேலாண்மைக்கான தொழில் நுட்ப பரிமாற்றத்திற்கும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Conference on alternatives for single use plastics


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->