நாங்குநேரியில் பிரச்சாரம் செய்கிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.!
cm mk stalin election campaign in nanguneri
தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற 19-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம்லீக், கொ.ம.தே.க. உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாகவும், அ.தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்டவை மற்றொரு அணியாகவும், பா.ஜனதா, பா.ம.க., த.மா.கா, அ.ம.மு.க., புதிய நீதிக்கட்சி உள்ளிட்டவை மூன்றாவது அணியாகவும், நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிடுகிறது.
இந்தத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை தி.மு.க. தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து தனது சூறாவளி தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
திருச்சி சிறுகனூரில் தனது பிரச்சாரத்தை மேற்கொண்ட முதல்வர் டெல்டா மாவட்டங்களில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு இன்று நாங்குநேரியில் நடைபெறும் நெல்லை, கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். அதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்து அங்குள்ள ரிசார்ட்டில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.
பிறகு அங்கிருந்து காரில் புறப்பட்டு நாங்குநேரியில் நடக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து அவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்கிறார். இந்தப் பிரசாரத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு மீண்டும் தூத்துக்குடியில் உள்ள ரிசார்ட்டில் இரவில் தங்குகிறார். முதலமைச்சரின் வருகையையொட்டி நெல்லை மாநகரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
English Summary
cm mk stalin election campaign in nanguneri