துரைமுருகன் மகன் மீதான வருமான வரி வழக்கு.. ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு.!!
ChennaiHC refuses to quash IT case against DMK MP KathirAnand
தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் கடந்த 2012-2013 நிதியாண்டிற்கான வருமானவரியை தாமதமாக தாக்கல் செய்ததோடு வருமான வரியையும் காலதாமதமாக கட்டியதாக கூறி வேலூர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கடந்த 2017 ஆம் ஆண்டு கதிர் ஆனந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் "வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கும், வரி செலுத்துவதற்கும் ஏற்பட்ட தாமதம் தொடர்பாக அபராதம் தான் விதிக்க முடியுமே தவிர வழக்கு தொடர முடியாது" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் சுந்தரேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு கால தாமதமானாலோ, வருமான வரி தாக்கல் செய்ய கால தாமதமானாலோ அபராதம் மிதிக்க மட்டுமே வருமானவரித்துறைக்கு அதிகாரம் உள்ளது. வருமானவரித்துறை தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வழக்கு தொடுத்துள்ளது என கதிர் ஆனந்த் தரப்பில் வாதிடப்பட்டது.
அதே நேரத்தில் வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தாமதமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்தது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்ட பிறகும் வருமான வரி செலுத்தவில்லை என்பதால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக வழக்கு தொடுக்கும் அதிகாரம் வருமான வரித்துறைக்கு உள்ளது என வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கதிர் ஆனந்த் வேண்டுமென்றே வருமான வரி கணக்கையும், வருமான வரியையும் தாக்கல் செய்தாரா? என்பதை விசாரணை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். எனவே வேலூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தலையிட முடியாது எனக்கூறி கதிர் ஆனந்த் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
English Summary
ChennaiHC refuses to quash IT case against DMK MP KathirAnand