பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் நடைபெறும் பயோ மைனிங் வேலைகள்! குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க தலைமைச் செயலாளர் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் நடைபெற்று வரும் பயோ மைனிங் வேலைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பெருங்குடி குப்பை  கொட்டும் வளாகத்தில்  உயிரி  அகழ்ந்தெடுக்கும் முறையில் குப்பைகளை அகற்றும் பணியினை தமிழ்நாடு அரசின் தலைமைச்  செயலாளர்  முனைவர்  வெ. இறையன்பு இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5100 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது.   இந்தத் திடக்கழிவுகள் மக்கும், மக்காத கழிவுகளாக பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யும் வகையில் பதனிடும் மையங்களுக்கு அனுப்பப்படுகிறது.  மீதமுள்ள கழிவுகள் பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் உள்ள குப்பைக் கொட்டும் வளாகங்களில் கொட்டப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் உயிரி அகழ்ந்தெடுத்தல் (Bio-Mining) பணியினை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகம் 225 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இதில் நீண்ட நாட்களாக கொட்டிக் கிடக்கும் குப்பை 34.02 இலட்சம் கன மீட்டர் அளவில் உள்ளது. பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் பயோ மைனிங் முறையில் குப்பைகளை அகழ்ந்தெடுக்கும் பணியானது ரூ.350.65 கோடி மதிப்பில், 11 உயிரி அகழ்ந்தெடுக்கும் மையங்களின் மூலம் செயல்பட்டு வருகிறது. 

பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகத்தில் பல ஆண்டுகளாக கொட்டப்பட்டு வரும் குப்பைகள்  தற்சமயம் உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் (Bio Mining) களையப்பட்டு அவற்றிலிருந்து  கல், மணல், இரும்பு, மரக்கட்டைகள், கண்ணாடி, ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தனியாக பிரித்தெடுத்து மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது. 

இத்திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த தலைமைச் செயலாளர் அவர்கள் பணிகளை  ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்குள்  நிறைவு செய்ய வேண்டுமென ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார்.  
முன்னதாக, தலைமைச் செயலாளர் அவர்கள் பள்ளிக்கரணையில் உள்ள குப்பைக் கொட்டும் வளாகத்தில் திடக்கழிவுகளிலிருந்து பிளாஸ்டிக் பொருட்களை தனியாக பிரித்து பண்டல்களாக மாற்றும் இயந்திரத்தின் செயல்பாடுகளையும், மக்கும் குப்பைகளிலிருந்து உரம் தயாரிக்கும் மைக்ரோ கம்போஸ்ட் மையங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


தொடர்ந்து, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அடையாறு ஆற்றங்கரையில்  திரு.வி.க. நகர் பாலம் முதல் கோட்டூர்புரம் பாலம் வரை மற்றும் கோட்டூர்புரம் பாலம் முதல் மறைமலை அடிகளார் மேம்பாலம் வரை இருபுறங்களிலும் ரூ.14.2 கோடி மதிப்பில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள், திரு.வி.க. நகர் பாலம் முதல்  MRTS பாலம் வரை ரூ.5.4 கோடி மதிப்பிலும்,  MRTS பாலம் முதல் கோட்டூர்புரம் பாலம் வரை ரூ.5.8 கோடி மதிப்பிலும் நடைபாதை அமைத்தல் மற்றும் மரங்கள் நடுதல் போன்ற பணிகளையும் தலைமைச் செயலாளர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து மரக்கன்றுகளை நடவு செய்தார். 

அடையாறு ஆற்றங்கரையின் இருபுறங்களிலும் 2350 மீட்டர் நீளத்திற்கு 60,000 மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை  22,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள மரக்கன்றுகள் நடும் பணிகளையும் விரைந்து மேற்கொள்ள தலைமை செயலாளர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.சிவ்தாஸ் மீனா, சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு. ககன்தீப்சிங் பேடி, துணை ஆணையாளர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bio mining work in Perungudi


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->