நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக சென்ற மாப்பிள்ளை.! ரயிலிலிருந்து தவறி விழுந்து பலி.!
A person dies after falling from train in madurai near
நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக சென்ற மாப்பிள்ளை ரயிலிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர். இவரது மகன் கிறிஸ்டியன் டேனியல்(25). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் இவருக்கு பெற்றோர், அடுத்த மாதம் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதற்காக திருமண அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு உறவினர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.
இதையடுத்து கிறிஸ்டியன் டேனியல் சென்னையில் உள்ள தனது நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக நேற்று நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றார்.
அப்பொழுது மதுரை அருகே தேனூர் பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தபோது, கிறிஸ்டியன் டேனியல் சாப்பிட்டுவிட்டு கை கழுவுவதற்காக வந்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.
இதைப்பார்த்த சக பயணிகள் உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரை ரயில்வே போலீசார், பார்த்தபோது அங்கு கிறிஸ்டியன் டேனியல் பரிதாபமாக உயிரிழந்து கிடந்துள்ளார்.
இதையடுத்து போலீசார் உயிரிழந்த கிறிஸ்டியன் டேனியல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
A person dies after falling from train in madurai near