சர்வதேச பளு தூக்குதல் போட்டியில் தங்கம், காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்றார் மீராபாய் சானு.!
Meerabhai Sanu Commonwealth games
சர்வதேச பளு தூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற மீரா பாய் சானு பர்மிங்காம் காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
சர்வதேச பளு தூக்குதல் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. முதல் முறையாக 55 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் மீராபாய் சானு, மொத்தம் 191 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கம் வென்றார்.
இந்த போட்டியில் முதலிடம் பிடித்ததன் மூலம், இந்த ஆண்டு பர்மிங்காமில் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க மீராபாய் சானு நேரடியாக தகுதி பெற்றுள்ளார். காமன்வெல்த் போட்டியின் பளு தூக்குதல் பிரிவில் 55 கிலோ எடைப் பிரிவு இந்த ஆண்டு புதியதாக சேர்க்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தர வரிசை அடிப்படையில் 49 கிலோ எடைப் பிரிவிலும் காமன்வெல்த் போட்டிக்கு மீராபாய் சானு தகுதி பெற்றுள்ளார். எனினும், காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை அதிகரிக்க, புதிய 55 கிலோ எடைப் பிரிவிலு மீராபாய் சானு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் 55 கிலோ எடைப்பிரிவில் சங்கத் சாகர், ரிஷிகாந்த சிங், 59 கிலோ எடைப்பிரிவில் பிந்தியாராணி தேவி ஆகியோரும் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளனர்.
55 கிலோ எடைப்பிரிவில், ஆஸ்திரேலிய வீராங்கனை ஜெசிகா 167 கிலோ எடையை தூக்கி இரண்டாமிடமும், மலேசியாவின் எல்லி காசந்திரா 165 கிலோ எடையை தூக்கி மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
பர்மிங்காம் காமன்வெல்த் போட்டிக்கான தகுதிச்சுற்றுப் போட்டியாக சிங்கப்பூரில் சர்வதேச பளு தூக்குதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 8 இடங்களைப் பிடிக்கும் வீரர்,வீராங்கனைகள் நேரடியாக காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Meerabhai Sanu Commonwealth games