6 முகங்களுடன் சுப்பிரமணியர்.. பண்ணேர் மொழியம்மை.. அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில்.!
Today special kalyana vigirtheeshwarar temple
இந்த கோயில் எங்கு உள்ளது?
கரூர் மாவட்டத்தில் உள்ள வெஞ்சமாங்கூடலூர் என்னும் ஊரில் அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
கரூரில் இருந்து சுமார் 24 கி.மீ தொலைவில் வெஞ்சமாங்கூடலூர் என்னும் ஊர் உள்ளது. வெஞ்சமாங்கூடலூரில் இருந்து இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
கருவறையில் 'விகிர்தீஸ்வரர்" நாகாபரணத்தின் கீழ் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.
விகிர்தீஸ்வரர் என்றால் 'நன்மைகள் தருபவர்" என்று பொருள். இவரை வழிபடுபவர்கள் தங்களது பாவங்கள் அனைத்தும் விலகப்பெற்று, நன்மைகள் கிடைக்கப் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.
நண்பன் உதவி என்று தன்னிடம் வந்தபோது தன் பிள்ளைகளை அடமானம் வைத்து உதவி செய்தார் இத்தலத்து சிவன்.
இவ்வாறு நட்புக்கு மரியாதை செய்த சிவனாக இவர் இருக்கிறார். இவரிடம் வேண்டிக் கொண்டால் நண்பர்களுக்குள் ஒற்றுமை கூடும், நல்ல நண்பர்கள் கிடைக்கப் பெறுவர் என்பது நம்பிக்கை.
பிரகாரத்தில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் 6 முகங்களுடன் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறார்.
இவரை அருணகிரியார், 'வெஞ்சக்கூடல் பெருமானே!" என்று பதிகம் பாடியுள்ளார்.
பிரிந்திருக்கும் தம்பதியர்கள் இவருக்கு திருக்கல்யாணம் செய்து வேண்டிக் கொண்டால் அவர்கள் மீண்டும் இணைந்து சிறப்பாக வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.
வேறென்ன சிறப்பு?
இத்தலத்து அம்பாள் பண்ணேர் மொழியம்மை, சுவாமிக்கு இடப்புறத்தில் தனிச்சன்னதியில் காட்சியளிக்கிறாள்.
இங்குள்ள விநாயகர் சித்தி விநாயகர் என்ற திருநாமத்தில் அழைக்கப்படுகிறார்.
இக்கோயிலில் சனி பகவான் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறார். முன்மண்டபத்தில் நடராஜர் சிறப்பாக காட்சியளிக்கிறார்.
இத்திருக்கோயில் 5 நிலை கோபுரங்களை கொண்டு அமைந்துள்ளது.
பிரகாரத்தில் நால்வர், அறுபத்து மூவர் மற்றும் பஞ்சலிங்க சன்னதியும் அமைந்துள்ளது.
மணிமுத்தாறு, குடகனாறு ஆகிய இரு ஆறுகள் சேரும் ஊர் என்பதால் இவ்வூருக்கு 'கூடலூர்" என்று பெயர்.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
மாசி மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோற்சவம், மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி ஆகியவை இக்கோயிலில் மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
திருமண தோஷம், புத்திர தோஷங்கள் நீங்க இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சுவாமி மற்றும் அம்பாளுக்கு பால் அபிஷேகம் செய்தும், திருக்கல்யாணம் செய்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
English Summary
Today special kalyana vigirtheeshwarar temple