நாளை ஆடி செவ்வாய்.. பூஜை செய்வது எப்படி.? என்னென்ன பலன்கள் கிடைக்கும்.?
How to pray Aadi Tuesday
தமிழ் மாதத்தில் சிறப்பு வாய்ந்த மாதம் என்றால் அது ஆடி மாதம் தான். அதற்கு காரணம் ஆடி மாதம் முழுவதுமே வழிபாட்டுக்கு உரிய மாதமாக திகழ்கிறது. அதன்படி ஆடி மாதத்தில் ஆடிப்பிறப்பு, ஆடி கிருத்திகை, ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு, ஆடி தபசு, ஆடிப்பூரம் என ஆடி மாதம் முழுவதும் சிறப்பானது.
இந்த காலகட்டத்தில் விரதம் இருந்து அம்மனை வழிபட்டால் செவ்வாய் தோஷம், நாக தோஷம், ராகு கேது தோஷம் போன்ற அனைத்து தோஷங்களும் விலகும் என கூறப்படுகிறது. அதன்படி ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் பூஜை செய்து அம்மனை வழிபட்டால் அனைத்து தீய சக்திகளும் நம்மை விட்டு விலகும்.
ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் அம்மனை நினைத்து வீட்டில் இருந்தபடியே சுலபமான முறையில் பூஜை செய்தால் பலவித நன்மைகள் கிடைக்கும். ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட வேண்டும்.
அதன் பிறகு வீட்டில் உள்ள பூஜை அறையை கழுவி சுத்தம் செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து பூஜை அறையில் உள்ள அனைத்து சாமி படங்களுக்கும் பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும்.
மேலும் பழம் மற்றும் பாலை வைத்து வணங்கும் கடவுளுக்கு நிவேதனம் வைக்க வேண்டும்.
2 குத்து விளக்குகளில் பஞ்சாயத் தீப எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கேற்றி இரு குத்து விளக்குகளையும் இரு புறம் வைத்துவிட்டு, சாம்பிராணி கொளுத்தி அந்த புகையை வீடு முழுவதும் பரவ செய்ய வேண்டும்.
அப்போது கும்பிடும்போது உங்களது பரம்பரை குலதெய்வத்தை நினைத்து வணங்கி வழிபட வேண்டும். குறிப்பாக அன்றைய தினம் உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருப்பது நீங்கள் வணங்கும் இறைவனின் முழு ஆசியை பெற்று தரும் என்பது நம்பிக்கை.