ராகுல் காந்தி குடும்பத்தை கண்டு ஏன் மோடி பயப்படுகிறார்?-அசோக் கெலாட் பேட்டி ..!
Why is Modi afraid of Rahul Gandhi's family?-Ashok Khelat Interview ..!
ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்க மறுத்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் ராகுல் காந்தி இதுபற்றி அதிகாரப்பூர்வமாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
தற்போது சோனியா காந்தி கட்சியின் தலைவராக இருந்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் தேர்வு வரும் செப்டம்பர் 20-ந் தேதிக்குள் நடைபெறும் என்று அக்கட்சியின் தேர்தல் குழு தெரிவித்துள்ளது.
இதனால், புதிய காங்கிரஸ் தலைவர் யார்? என்பது பற்றிய விவாதம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தியே ஏற்க வேண்டும் என்று ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அசோக் கெலாட் தெரிவித்துள்ளதாவது:
ராகுல் காந்தி கட்சித் தலைவராக வரவில்லை என்றால், அது நாட்டில் உள்ள அனைத்து காங்கிரஸ்காரர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும். நாட்டில் உள்ள சாமானிய காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு ராகுல் காந்தி இந்த பதவியை தானாக ஏற்க வேண்டும் என்றும் கட்சிக்குள் ராகுல் காந்தி தலைவராவதற்குதான் ஆதரவான சூழல் இருக்கிறது என்றார்.
கடந்த 32 ஆண்டுகளில் ராகுல் காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் பிரதமராகவோ, மத்திய அமைச்சராகவோ, முதல்வராகவோ பொறுப்பேற்றதில்லை. பிறகு ஏன் மோடி இந்தக் குடும்பத்தைக் கண்டு பயப்படுகிறார். சுதந்திரத்திற்கு முன்பும், சுதந்திரத்திற்குப் பிறகும் காங்கிரஸ் கட்சி ஒரே மாதிரியாகதான் உள்ளது.
அனைத்து மதங்களையும் வகுப்பினரையும் அழைத்துச் செல்லும் கட்சி காங்கிரஸ். கடந்த 75 ஆண்டுகளில் நாட்டில் ஜனநாயகத்தை காங்கிரஸ் உயிருடன் வைத்துள்ளது. அதன் காரணமாகதான் இன்று நரேந்திர மோடி நாட்டின் பிரதமராகவும், கெஜ்ரிவால் டெல்லி முதலமைச்சராகவும் இருக்கின்றனர்" என்று அவர் தெரிவித்தார்.
English Summary
Why is Modi afraid of Rahul Gandhi's family?-Ashok Khelat Interview ..!