வீரசோழபுரத்தில் திருடப்பட்ட ஆறு வெண்கல சிலைகள் அமெரிக்காவின் அருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்பு.!
veerasolapuram god statue in usa
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி ஜெயந்த் முரளி மற்றும் ஐ.ஜி தினகரன் உள்ளிட்ட காவல் அதிகாரிகள், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட போது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 30 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட ஆறு வெண்கல சிலைகள் அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரசோழபுரத்தில், திரிபுராந்தகர், திரிபுரசுந்தரி மற்றும் நாரீஸ்வர சிவன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 30 ஆண்டுகளுக்கு முன், நடனமாடும் நடராஜர், வீணாதாரி தட்சிணாமூர்த்தி, துறவி சுந்தரர், பரவை நாச்சியார் என 9 சிலைகள் திருடப்பட்டுள்ளது.
இந்த சிலைகள், பஞ்சலோகம் மற்றும் வெண்கலத்தினால் செய்யப்பட்டவை. இந்த சிலைகளை மீட்கக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், 2018-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும், இது குறித்து மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிலைகளை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி ஜெயந்த் முரளி மற்றும் ஐ.ஜி தினகரன் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து, மீட்க வேண்டிய சிலைகள் தொடர்பாக அமெரிக்காவில் உள்ள விஜயகுமார் என்ற சமூக ஆர்வலர் மூலம் அடையாளம் காணும் பணி நடந்து வந்தது.
அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரசோழபுரத்தில் திருடப்பட்ட ஆறு வெண்கல சிலைகள் அமெரிக்காவில் அருங்காட்சியகம் மற்றும் ஏலம் விடும் நிறுவனங்களில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இவை சோழர் கால சிலைகள் எனவும், இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர், சிலைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
veerasolapuram god statue in usa