இனி ஒட்டோ, உறவோ கிடையாது.. "டெல்லியே சொன்னாலும்" சேர மாட்டோம்.. ஓபிஎஸ் தரப்பு திட்டவட்டம்.!!
OPS side that they will not merge with EPS even delhi said
ஓபிஎஸ் அணியினரின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள பிரபல ஓட்டலில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம், வைத்தியலிங்கம், பண்ரூட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ் அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் "நம்மிடையே ஒற்றுமை உள்ளது. ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்திய போது நாட்டு மக்கள் ஆதரவு அளித்தார்கள். எதிர் தரப்பு ஒன்று சேருங்கள் என்று சொன்னார்கள். சேர்ந்ததால் என்ன நன்மை கிடைத்தது?
ஒரு முறை கூட்டு சேர்ந்து அனுபவித்த கொடுமையை ஓபிஎஸ் நன்கு அறிந்துவிட்டார். எடப்பாடி பழனிசாமி தரப்புடன் ஒற்றுமை என்ற பேச்சுக்கே இனி இடமில்லை. ஓ.பன்னீர் செல்வம் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர். எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடன் உள்ள நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்களை திரும்ப கொண்டு வந்து சேர்க்க அதிமுகவின் அடிப்படை தொண்டர்களுக்கு தான் உரிமை உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்புடன் இனி ஒட்டோ உறவோ கிடையாது. எடப்பாடி பழனிசாமி, அவரது மாவட்ட செயலாளர்கள், அவர்களின் பொதுக்குழு உறுப்பினர்கள் தவிர யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்.
எடப்பாடியுடன் சேர வேண்டும் என யார் சொன்னாலும், ஏன் டெல்லி சொன்னாலும் இனி சேர மாட்டோம். டிடிவி தினகரனுடன் சேர்ந்து அரசியலில் பயணிக்கிறோம். எங்களிடம் தொண்டர் பலம் உள்ளது அதற்கு உறுதுணையாக டிடிவி தினகரன் இருப்பார். சசிகலாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம்.
ஆனால் இதுவரை அனுமதி தரவில்லை. கூடிய விரைவில் அவர் அனுமதிதந்தால் சசிகலாவை சந்திப்போம். பாஜகவுடன் தோழர்களாக இருக்கலாம். தொண்டனாக இருக்க முடியாது. அவர்கள் தயவுசெய்து காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை" என மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் பேசி உள்ளார்.
English Summary
OPS side that they will not merge with EPS even delhi said