சசிகலாவிடம் போயஸ் கார்டனை விற்க போகிறாரா? ஜெ.தீபா.! அவரே அளித்த பரபரப்பு பதில்.!
J Deepa about Vetha Illam rumours
முதலமைச்சராக இருக்கும் போது உயிரிழந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முயற்சித்தது. அதே நேரத்தில் இந்த இல்லத்திற்கு ஜெயலலிதாவின் மருமகள் ஜெ.தீபா மற்றும் மருமகன் தீபக் ஆகியோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதனைத் தொடர்ந்து போயஸ் கார்டன் இல்லம் தீபா மற்றும் தீபக் இருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இத்தகைய சூழலில், ஜெயலலிதாவின் இந்த வீட்டை மறைமுகமாக சசிகலா வாங்க அறக்கட்டளை அமைத்துள்ளதாக சில தகவல்கள் கூறுகின்றன. எனவே இந்த வீடு யார் கைக்கு செல்லும் என்ற பரபரப்பு நிலவி வருகின்றது.
இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜெ.தீபா இந்த வீட்டில் குடியேற முடிவெடுத்துள்ளார். இது குறித்து அவர் சமூக வலைதளங்களில் ஒரு ஆடியோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த ஆடியோவில் தீபா, "போயஸ் கார்டன் எங்களது பூர்வீக சொத்து. எங்கள் பாட்டி சந்தியா இறந்த பின்னர், என் அத்தை ஜெயலலிதாவிற்கு உயில் வழியாக கொடுக்கப்பட்டது.
எனது தந்தை மற்றும் தாய் இருவரும் போயஸ் கார்டனில் தான் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர். நான் பிறந்ததும் அங்கு தான். சிறிய கருத்து வேறுபாட்டினால் எங்களது குடும்பம் அங்கிருந்து வெளியேறி தி நகரில் குடியேறியது. என் அத்தை ஜெயலலிதா அழைக்கும் போதெல்லாம் நான் போயஸ் கார்டன் செல்வேன். அவர் கேட்டுக் கொண்டதால்தான் ஒரு கட்டத்தில் அங்கேயே தங்கி வாழ ஆரம்பித்தோம்.
அவர் அரசியலில் ஈடுபட்டதை தொடர்ந்து அங்கிருந்து நாங்கள் வெளியேறி விட்டோம். இந்த பூர்வீக சொத்தை கேட்டு நானும், தீபக்கும் நீதிமன்றம் வழியாக மீண்டும் பெற்றுள்ளோம். முதல்வராக அத்தை இறந்தபோது அவருடன் எத்தனையோ ஆயிரம் பேர் பயணித்திருக்கலாம். ஆனால் அவர்கள் பூர்வீக சொத்தில் உரிமை கொண்டாட முடியாது.
குடும்ப அந்தஸ்தை அவர்களால் பெறவும் முடியாது. குடும்ப சொத்துக்களுக்கு உரிமை கோர அவர்களுக்கு எந்த நியாயமும் இல்லை. சசிகலா குடும்பத்திற்கும் இது பொருந்தும். போயஸ் கார்டனின் உள்ள ஜெயலலிதாவின் இல்லம் விற்பனைக்கு வரும் என்பதை யாரும் நம்ப வேண்டாம்.
அவை அனைத்தும் வதந்தி. இந்த வீட்டை நாங்கள் யாருக்கும் விற்ப்பதாக இல்லை. எங்களை யாரும் அணுகவும் இல்லை. வேதா நிலையத்தை பராமரிக்க வேண்டிய முழு பொறுப்பு எங்களிடம் இருக்கிறது. அதை கண்ணும், கருத்துமாக நான் செய்து கொண்டிருக்கிறேன். விரைவில் அங்கு குடியேறுவோம்." என்று தெரிவித்துள்ளார்.
English Summary
J Deepa about Vetha Illam rumours