பேக் ஐடி கருப்பசாமி... சுத்துப்போட்டு, தட்டிதொக்கிய தமிழக போலீஸ்.!
fb fake id karuppusami
விருதுநகர் மாவட்டம் வெல்லூரை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் ராஜேஸ்வரன், திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பகுதியை அடுத்துள்ள சி.புதூர் கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவரது பெயர், புகைப்படம் மற்றும் தொலைபேசி எண் போன்றவற்றை பயன்படுத்தி போலியான முகநூல் கணக்கு ஒன்றை தொடங்கியுள்ளார்.
ராஜேஸ்வரன் அந்த முகநூல் பக்கத்தில், அரசியல் பிரமுகர்கள் தொடர்பாக அவதூறான செய்திகளை பரப்பி வந்துள்ளார். இது பற்றி தெரிய வந்தவுடன் கருப்பசாமி திண்டுக்கல் மாவட்ட சைபர்கிரைம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து அந்த முகநூல் கணக்கை முடக்கி விசாரணையில் ஈடுபட்டனர்.
காவல்துறையினரின் விசாரணையின் போது, விருதுநகர் மாவட்டம் வெல்லூரை சேர்ந்த கருப்பையா என்பரது மகன் ராஜேஸ்வரன், கருப்பசாமி பெயரில் போலியான முகநூல் கணக்கு உருவாக்கி அரசியல் பிரமுகர்கள் தொடர்பாக அவதூறான செய்திகளை பரப்பி வந்தது தெரிய வந்ததுள்ளது.
இதனையடுத்து, காவல்துறையினர் ராஜேஸ்வரனை கைது செய்தனர். பின்னர் ராஜேஸ்வரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.