சென்னை முதல் தூத்துக்குடி வரை விமான வளர்ச்சி…! - பெயர் மாற்ற கோரிக்கையை முன்வைத்த எல்.முருகன்
Air connectivity from Chennai to Thoothukudi L Murugan put forward request name change
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) தளத்தில் வெளியிட்ட பதிவில், மத்திய அரசின் விமானப் போக்குவரத்து வளர்ச்சியை விரிவாக எடுத்துரைத்துள்ளார்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 11 ஆண்டுகளில், நாடு முழுவதும் விமானப் போக்குவரத்தை மக்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் விரிவுபடுத்தி, விமான நிலைய கட்டமைப்புகளை பலப்படுத்தும் நோக்கில் பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில், தமிழகத்தில் சென்னை, கோவை மற்றும் தூத்துக்குடி விமான நிலையங்களில் பெரும் அளவிலான விரிவாக்கப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், திருச்சி மற்றும் மதுரை விமான நிலையங்கள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழலில், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை நேரில் சந்தித்து, தமிழக விமான நிலையங்களில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆலோசித்ததுடன், விமான நிலைய பெயர் மாற்றம் உள்ளிட்ட சில முக்கிய கோரிக்கைகளையும் முன்வைத்ததாக எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, கோவை விமான நிலையத்தை நேரில் பார்வையிட்டு, அங்கு நடைபெறும் விரிவாக்கப் பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும், சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கான கூடுதல் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கோரியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து பிற முக்கிய நகரங்களுக்கு விமான சேவைகளை அதிகரிக்க வேண்டும் என்றும், தற்போது ‘Tuticorin’ என அழைக்கப்படும் விமான நிலையத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக ‘தூத்துக்குடி விமான நிலையம்’ என மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் அந்தச் சந்திப்பில் முன்வைத்ததாக பதிவில் தெரிவித்துள்ளார்.
English Summary
Air connectivity from Chennai to Thoothukudi L Murugan put forward request name change