சூடு பிடிக்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்... 4 முனை போட்டி உறுதி...!!
4 way contest confirmed in erode east byelection
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா மறைந்ததை அடுத்து எம்எல்ஏ பதவி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று மூன்று மாநில சட்டப்பேரவை தேர்தலுடன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது. தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தமிழக அரசியல் களத்தில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட பல கட்சிகள் மீண்டும் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றன.
குறிப்பாக திமுக கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றது. அதே போன்று தற்பொழுது நடைபெறும் இடைத்தேர்தலிலும் திமுக சார்பில் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிட உள்ளது. அந்த வகையில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற தமாகா வரும் இடைத்தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டியுள்ளது. இது குறித்தான பேச்சுவார்த்தை கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாஜக, கூட்டணி தலைமையின் ஆலோசனையின்றி தேர்தல் பணி குழு தொடர்பான அறிவிப்பை அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை நேற்று இரவு அறிவித்தார். மேலும் நாளை கடலூரில் செயற்குழு மற்றும் பணிக்குழு தொடர்பான ஆலோசனை கூட்டம் தமிழக பாஜக சார்பில் நடைபெற உள்ளது. இதன் மூலம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக தனித்து களம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகலாம்.
அதேபோன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். தற்பொழுது வரை நான்கு கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. மேலும் தேமுதிக, அமமுக போன்ற கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஓரிரு நாட்களில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளன. அதேபோன்று அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ் அணியினர் வேட்பாளரை நிறுத்த அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் எதிர்வரும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
4 way contest confirmed in erode east byelection